பழமொழி நானூறு
எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
கோப்புக் குழிச்செய்வ தில். (பாடல்-63)
பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல் நாடனே! (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்லவல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து, குறுநிலத்தை ஆளுமரசன் எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல) துன்பமே துணையாக, தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி, இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து, முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல் வேண்டும்.) "குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வ தில்' என்பது பழமொழி.