தமிழ்மணி

சங்க இலக்கியத்தில் "காசு'!

DIN

சங்க இலக்கியத்தில் "காசு' என்ற சொல்லைப் பற்றிய குறிப்புகள் 14 இடங்களில் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளின் மூலம் சங்க காலத்தில் காசு என்ற சொல் எந்தப் பொருளில் வழங்கப்பட்டது என்பதைக் காண்போம். இப் பதினான்கு குறிப்புகளில் ஏழு இடங்களில், காசு என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஓர் அணிகலனில் கோக்கப்படும் உறுப்பாகவே கூறப்பட்டிருக்கிறது. அவை:
 1. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திரு 16
 2. காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் - நற் 66/9
 3. பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங் 310/1
 4. உடுத்தவை, கைவினை பொலிந்த காசு அமை பொலம்
 காழ் மேல் - கலி 85/3
 5. பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் 75/19
 6. பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் 269/15
 7. பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் - புறம் 353/2
 இங்கே, "அல்குல்' என்பது இடுப்பைச் சுற்றி, இடுப்புக்கும் சற்றுக் கீழான பகுதியைக் குறிக்கும். இன்றைக்குப் பெண்கள் இடுப்பில் ஒட்டியாணம் அணிந்திருப்பது போல, சங்க காலத்துப் பெண்கள் தம் இடுப்புக்குச் சற்றுக் கீழே, காசுகளைக் கோத்துச் செய்த ஓர் அணிகலனை அணிந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்தக் காசுகள் என்ன வடிவத்தில் இருந்தன என்பதனையும் இந்தக் குறிப்புகளினின்றும் அறியலாம்.
 இக்காசுகள் முட்டை அல்லது உருண்டை வடிவில் இருந்ததாகவும், பெரும்பாலும் பொன்னால் செய்யப்பட்டதாகவும் பல குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இக்காசுகள் "குமிழம்பழம்' போல் இருந்தன என்கிறது நற்றிணை.
 "இழை மகள்
 பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
 குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்' (நற் 274/3-5)
 இதன் பொருள்: அணிகலன் அணிந்த பெண்ணின் பொன்னால் செய்யப்பட்ட காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும் குமிழமரங்கள் செறிந்து வளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகள். குமிழ் என்றாலே உருண்டை என்று பொருள். சங்க காலத்தில் பொன்னால் செய்யப்பட்ட காசு எப்படி இருந்திருக்கும் என்று படம் (1) காட்டுகிறது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வண்ணம், இக்காசுகள் வேப்பம் பழத்தை ஒத்திருந்தன என்கிறது குறுந்தொகை.
 "கிள்ளை
 வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
 புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
 பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்' (குறு 67/2-4)
 இதன் பொருள்: கிளியானது தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம் புதிய நூலில் கோப்பதற்காக முனை சிறந்த, நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட பொன் அணிகலனின் ஒரு காசினைப் போன்றிருக்கும். வேப்பம்பழமும், படத்தில் காட்டப்பட்டுள்ள குமிழம்
 பழம் போல் இருக்கும் என்று நாம் அறிவோம்.
 பொன் செய் காசு, பொலம் கல காசு என்பதனால், பொன்னால் செய்யப்படாத காசும் இருந்திருக்கும் என்பது புலனாகிறது. மேலும், சில காசுகள் பளிங்கினால் செய்யப்பட்டன என்றும், அவை நெல்லிக்காய் போல் இருந்தன என்றும் கூறுகிறது அகநானூறு.
 "புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
 கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
 அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப' (அகம் 315/10-12)
 இதன் பொருள்: புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லியின் மேல்காற்று உதிர்த்திட்ட, குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள் அறுந்துபோன நூலிலிருந்த உருண்ட பளிங்கின் துளையிட்ட காசுகளை ஒப்ப சில காசுகள் மணிகளால் செய்யப்பட்டிருக்கும் என்று இன்னொரு பாடல் கூறுகிறது.
 "குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
 மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
 உகாஅ மென் சினை உதிர்வன கழியும்' (அகம் 293/6-8)
 இதன் பொருள்: குயிலின் கண்ணைப் போன்ற நிறமுள்ள காய்கள் முற்றி மணியினால் செய்யப்பட்ட காசுகளைப் போன்ற கரிய நிறத்திலான பெரிய கனிகள் உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும். உகா என்பது ஓமை மரம். (படம்.2) இதன் கனிகள் மணி நிறத்தில் இருப்பதைக் காணலாம். சில காசுகள் வட்டமாகத் தட்டை வடிவிலும் இருந்திருக்கின்றன என்று ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.
 "பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்' (ஐங் 310/1) பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுகளை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குல் என்பது இதன் பொருள். பாண்டில் என்பது வட்டம் என்ற பொருள் தரும். இது இன்றைய காசுமாலையை ஒக்கும். ஆனால், பாண்டில் என்பது பெண்கள் அணியும் ஓர் அணிகலன் என்பார் பெருமழைப்புலவர் சோமசுந்தரனார். அப்படியெனில், பாண்டில் காசும் ஏனைய காசுகளைப் போல் உருண்டை வடிவினதாகவே இருந்திருக்கலாம்.
 இதுவரை "காசு' என்பது பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையில் கோப்பது என்று அறிந்தோம். ஆனால், சிறுவர்கள் காலில் அணியும் கொலுசு என்ற கிண்கிணியிலும் காசுகள் கோக்கப்படும் என்று குறுந்தொகை கூறுகிறது.
 "செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
 தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
 காசின் அன்ன போது ஈன் கொன்றை' (குறு 148/1-3)
 இதன் பொருள்: செல்வச் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின் காசைப் போன்ற மொட்டுகளை ஈன்ற கொன்றைபோது என்பது மொட்டு; அது விரிவதற்கு முன் உருண்டையாக இருக்கும். இந்தக் கிண்கிணிக் காசுகள் கொன்றையின் இதழ்களைப் போல் அன்றி, மொட்டுகளைப் போன்று இருந்ததாகப் பாடல் குறிப்பிடுவதால் காசுகள் பொதுவாக முட்டை அல்லது உருண்டை வடிவத்தில்தான் இருந்திருக்கின்றன என்று தெளிவாகிறது.
 எனவே, சங்க காலத்தில் காசு என்பது, "முட்டை வடிவத்தில் அல்லது உருண்டையாக இருந்திருக்கிறது'; "மிகப் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது'; "பளிங்கு, மணிகள் ஆகியவற்றாலும் செய்யப்பட்டிருக்கிறது.' பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையிலும், சிறுவர்கள் காலில் அணியும் கொலுசிலும் வரிசையாகக் கோக்கப்பட்டிருக்கிறது.
 "காசு' என்பது பணமதிப்பு உடையது என்றோ, கொடுக்கல்-வாங்கலில் பயன்படுத்தப்பட்டது என்றோ சங்க இலக்கியங்கள் தெரிவிக்கவில்லை.
 - முனைவர் ப. பாண்டியராஜா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT