நில உலகில் காணப்படாததும் மற்றும் இத்தேக சம்பந்தத்தை விடுத்துச் சூக்கும சரீரத்தில் ஆன்மாவானது விளங்கும்போது எம்பெருமான் தமது அடியார்களை அழைத்துச் சென்று பாற்கடல் நாயகனாக பள்ளி கொண்டு சேவை சாதிக்கின்றார். இதுவே, வைணவ உலகில் திருப்பாற்கடல் என்று அழைக்கப்பட்டு 107 -ஆவது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றது. இங்கிருந்து கொண்டே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி. அந்தப் பெயரினிலேயே இப்பூவுலகில் ஒரு தலம் உள்ளது.
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பாற்கடல் எனும் கிராமம். நாராயண சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகள் இவ்வூரை குறிப்பிடுகின்றன.
இங்குள்ள தொன்மையான ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மேல் சயனித்து, தலையணைக்கு மரக்காலை வைத்துக்கொண்டு, ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நாபியில், தாமரைத் தண்டின் மேல் பிரம்மா அமர்ந்து அரங்கனை கை கூப்பும் நிலையில் அளிக்கும் அற்புத சேவையை இன்றைக்கெல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.
அத்தி ரங்கரில் மூத்த ஆதிமூல ரங்கர் இவரே எனக் கூறப்படுகிறது. தனி சந்நதியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் கம்பீரத்துடன் வீற்றிருக்கும் கோலம். தாயாரின் திருமுக மண்டலம் முதிர்ச்சியடைந்த தாயின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கின்றது. பெரிய திருவடி, சிறிய திருவடி சந்நிதிகளும் உள்ளன.
திருக்கோயில் சார்பாக வெளியிடப்பட்ட தல வரலாற்றுத் தகவலின் படி, சத்யவிரத ஷேத்திரமான காஞ்சியில் சரஸ்வதி இல்லாமல் மற்ற பத்தினிகளான சாவித்ரி, காயத்ரியோடு பிரம்மா ஒரு யாகத்தைத் தொடங்க, கோபங்கொண்ட சரஸ்வதி வேகவதி என்ற நதிரூபமாக யாகத்தை அழிக்கவரவே, எம்பெருமான் ஆதிசேஷன் மேல் சயனத்துடன் அணை போல் அந்நதியை தடுத்தாராம்.
சரஸ்வதி கோபம் தணிந்து ஒதுங்க, யாகம் பூர்த்தியானது. பிரம்மாவின் பிரார்த்தனைக்கு இணங்க நிரந்தரமாக சேவை தரும் இப்பெருமானைச் சேவிப்போர்க்குச் சித்ர குப்தன் எழுதிவைத்த பாவங்கள் நீங்கப் பெறுவதாக ஜதீகம். இந்த தகவல்கள் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகர் அருளிய மெய்விரத மான்மியம் என்னும் மங்களாசாசனப் பாசுரங்களிலிருந்து அறியப்படுகின்றது. திருமணப் பிராப்தி, சந்தான பாக்கியம் வேண்டி இங்கு வந்து பக்தர்கள் பரிகாரம் செய்து பலன்பெறுவது கண்கூடு.
தற்போது இந்த ஆலயத்தில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நடந்துவருகின்றது. 107- ஆவது திவ்யதேசத்திற்கு ஒப்பாகப் போற்றப்படும், இவ்வாலயத் திருப்பணியில் திருமால் அடியார்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்.
தொடர்புக்கு: எஸ். கௌதம் - 99421 58089 / 98944 02289.