மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம் வேண்டும்.
மனதை எப்போதும் இளமையாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடு. முடிந்த அளவு ஜபம், தியானம் செய்.
மனம் சஞ்சலப்படும்போதெல்லாம் இறைவனிடம் மனம் திறந்து பிரார்த்தனை செய்.
மனிதப்பிறவி இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும்போதுதான் மிகவும் பாக்கியம் பெறுகிறது.
நாளும் நேரமும் பார்த்து காலத்தை வீணாக்காமல், நல்ல காரியங்களை விரைவாகச் செய்து முடி.
யார் இறைவனையே நம்பி வாழ்கிறார்களோ, அவர்களை அவர் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறார். - அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்
எந்த மனிதன் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதையே தன் முதல் கொள்கையாகக் கருதிச் செய்கிறானோ, எவன் உண்மை பேசியும் நாணயம் தவறாமல் நடந்தும் வருகிறானோ, எந்த மனிதன் தன் புலன்களை அடக்கியாள்கிறானோ அவனிடம் பகவான் இருக்கிறார். - பத்ம புராணம்
காட்டில் வாழும் மிருகங்கள், அந்தக் காட்டில் தங்களுக்கு வகை வகையான உணவுகள் கிடைக்கும் வரையில்தான் அந்தக் காட்டில் வாழும். இல்லையென்றால் அவை வேறு கானகத்தை நாடும். இது போலவே, மனிதன் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படும்போது, மரணத்தை வரவேற்று மயானபூமிக்குச் சென்று விடுகிறான்.
நல்லவர்கள் ஒருபோதும் கொடியவர்களை நாடமாட்டார்கள். அதனால், கொடியவர்களுக்குக் கொடியவர்களே நண்பர்களாகி விடுவார்கள். இருவர் செயல்முறைகளும் ஒன்றாகிவிடுவதால், அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பாராட்டிப் பேசிக் கொள்வார்கள். அவர்கள் இப்படிப் பாராட்டிக் கொள்வது பன்றி சேற்றில் புரண்டு, உடல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொள்வது போன்றது. - வேமன்னா
வீட்டிற்கு வந்தவன், சரணடைந்தவன், உயிரை யாசிப்பவன் ஆகியவர்களைக் கொல்வது மிகவும் இழிவானது. - மகாபாரதம், ஆதிபர்வம்
குருவின் முன்னிலையில் பணிவில்லாமல் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது. - விஷ்ணு புராணம்