பொதுவாக, சனிமஹா தசை நான்காம் தசையாகவும் செவ்வாய்பகவானின் தசை ஐந்தாம் தசையாகவும் குருமஹா தசை ஆறாம் தசையாகவும் ராகுபகவானின் தசை ஏழாம் தசையாக வந்தால் அவைகள் துயர் தரும் தசைகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த துயர் தரும் கிரகங்களின் தசை காலத்தில் இந்த கிரகங்களை செவ்வாய், சனி, ராகு, சூரியபகவான்கள் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் துயரத்திற்கு பதிலாக யோகம் ஏற்படும். லக்னாதிபதியும் ஆயுள் ஸ்தானாதிபதியும் மிகுந்த பலகீனம் அடைந்து, இந்த துயர்தரும் கிரகங்களும் மேற்கூறிய அசுபர் சம்பந்தமின்றி தனித்து நின்றால்தான் துயரங்கள் உண்டாகிறது. அதனால் பிறப்பில் கேதுமஹா தசை தொடங்கியவர்களுக்கு ஐந்தாவது தசையாக செவ்வாய் தசை நடந்தால் மேற்கூறிய வகையில் நிவர்த்தி உண்டானால் செவ்வாய் மஹா தசை யோக தசையாகவே அமையும் என்று கூறவேண்டும். அதோடு கேதுபகவான் குழந்தை பருவத்தில் தரவேண்டிய நற்பலன்களை செவ்வாய்பகவான் தன் தசையில் தருவார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
யோக லட்சணம் பெறும் கேதுபகவான்: கேதுபகவானானவர் திரிகோண வீடுகள் ஒன்றில் இருந்து கேந்திர வீடுகளில் அதிபதிகளோடு சம்பந்தம் பெற்றால் யோக லட்சணம் பெறுவார். அதேபோல் கேந்திர வீடுகளில் அமர்ந்து திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் கேதுபகவானால் யோக பலன்கள் ஏற்படும்.
அஷ்டமஹா நாகயோகம்: ராகுபகவான் ஆட்சி, உச்சம் பெற்றுள்ள கிரகங்களுடன் இணைந்து இருப்பது அஷ்டமஹா நாகயோகம் என்று கூறப்படுகிறது. இந்த எட்டு நாகங்களில் முதலாவதாக கருதப்படுவது ஆனந்தன் என்கிற சேஷனாகும். இந்த அனந்தனை படுக்கையாகக் கொண்டு மஹாவிஷ்ணு சயனத்திருப்பதை அனந்த சயனம் என்று அழைக்கிறார்கள். மற்ற ஏழு நாகங்களாவன வாசுகி, தக்சாகன், குளிகன், கார்கோடகன், பத்மன், மஹாபத்மன் மற்றும் சங்கபாலன் ஆகியவைகளாகும். இத்தகைய ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும் ராகுபகவான் தன் தசையில் அந்த ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் சுப பலத்தை கிரகித்துக் கொண்டு தங்கள் தசையில் மேன்மையான பலன்களைத் தருகின்றன என்பது அனுபவ உண்மை.