சான் பிரான்சிஸ்கோ: கூகுளின் 'ஆப்'களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் அதிக அளவில் கூகுளின் ஆண்டிராய்ட் இயங்கு செயலி (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) பயன்படுத்தப்படுகிறது. அதில் கூகுள் மேப் உள்ளிட்ட பல்வேறு ஆப்கள் பயனாளர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது. இவை அனைத்தும் இருப்பிட தகவல் சேவை (லொகேஷன் டேட்டா / ஹிஸ்டரி) என்னும் சேவையின் வழி ஒழுங்கு செய்யப்படுகிறது. பொதுவாக இந்த சேவையை அணைத்து (ஆஃப்) வைத்து விட்டால் பயனாளர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படாது என்று கூகுள் உதவித் தகவல் (ஹெல்ப்) பக்கத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூகுளின் 'ஆப்'களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது கூகுள் உதவித் தகவல் (ஹெல்ப்) பக்கத்தில், இருப்பிட தகவல் சேவை (லொகேஷன் டேட்டா / ஹிஸ்டரி) என்னும் சேவை தொடர்பான விளக்கமானது கீழ்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளது:
‘இந்த சேவையில் செய்யபப்டும் மாற்றமானது உங்கள் போனில் உள்ள கூகுள் லொகேஷன் சர்வீஸ் மற்றும் பைண்ட் மை போன் உள்ளிட்ட இதர இருப்பிட தகவல் சேவைகளை பாதிக்காது.
கூகுள் மேப்ஸ் மற்றும் தேடுதல் வசதிகளுக்காக உங்கள் இருப்பிடம் தொடர்பான சில தகவல்கள் சேகரிக்கப்படலாம்.’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசும் பொழுது, "பயனாளர்களின் கூகுள் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும், கூகுள் உதவி தொடர்பாக கூடுதல் விளக்கமளிக்கவுமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதன் மூலம் ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை கூகுள் தொடர்ந்து கண்காணிப்பது உறுதியாகியுள்ளது.