இஸ்லாமாபாத்: அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்து சேர்த்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நவாஸும், அவரது குடும்பத்தினரும் லண்டனில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்ததாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில் பிரதமர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பர வீடுகள் வாங்கியது தொடர்பான ஒரு வழக்கில், இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீஃப் தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.