ஜகார்தா: இந்தோனேசியாவில் முதலை ஒன்று கிராம வாசியைக் கொன்றதற்காக பழிக்குப் பழி வாங்க ஊரே சேர்ந்து 300 முதலைகளை கொன்ற பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் முதலைப் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், அவ்வப்பொழுது கிராமவாசிகள் முதலைகளால் தாக்கப்படும் சம்பவங்களும் நடப்பதுண்டு.
இந்நிலையில் சனிக்கிழமையன்று தான் வளர்க்கும் கால்நடைகளுக்காக பசும்தழைகளைத் தேடி 48 வயது கிராமவாசி ஒருவர் முதலைப் பண்ணையின் அருகில் உள்ள பகுதி ஒன்றுக்குள் நுழைந்தார். அப்பொழுது மறைந்திருந்த முதலை ஒன்றுஅவரை அடித்துக் கொன்றது.
நடந்த இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் திரண்டு இறந்த மனிதனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் நேராக காவல் நிலையம் சென்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினர்.
ஆனாலும் ஆத்திரம் தீராத அவர்கள் அங்கிருந்து நேராக தடிகள், கத்திகள், அரிவாள்கள் மற்றும் மண் வாரும் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் நேராக குறிப்பிட்ட முதலைப் பண்ணைக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்த உள்ளங்கை அகல குட்டி முதலைகளில் இருந்து இரண்டு மீட்டருக்கு மேலாக நீளமுள்ள வளர்ந்த முதலைகள் வரை என மொத்தம் 292-க்கும் மேற்பட்ட முதலைகளை அடித்துக் கொன்றனர்.
இறந்து போன ஒரு மனிதனுக்குப் பதிலாக இத்தனை முதலைகள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது