இலங்கை உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடையை எதிர்த்து ராஜபட்ச மேல்முறையீடு
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்றது.
அப்போது அதிபர் சிறீசேனா பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் பொதுத்தேர்தல் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.
இது நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நாளையே நாடாளுமன்றத்தை கூட்டினாலும், பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளோம் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து, ராஜபட்ச அணியினர் வரும் 19-ஆம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளனர்.