தி ஹேக்: மனிதாபிமான அடிப்படையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்குங்கள்: என்று அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் ஈரான் உடன் எந்த சர்வதேச நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் செய்யக் கூடாது என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடுத்திருந்தது. இது தொடர்பான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடத்தது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்த தீர்ப்பில் சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளதாவது:
'மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் என்பது அந்நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும்.
எனவே இதனைக் கவனத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்.
இவ்வாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.