பிட்ஸ்பர்க்: அமெரிக்காவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேணியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூத மக்களின் வழிபாட்டுக் கூடம் ஒன்று அமைநதுள்ளது. இந்த வழிபாட்டுக் கூடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். தகவலறிந்து விரைந்து வந்து காவல்துறையினர் மீதும் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று அதிகாரிகள் மீதும் குண்டு பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மிகுந்த போராட்டதிற்குப் பிறகு காவல் துறையினர் அந்தநபரை மடக்கிப் பிடித்தனர். அவர் பெயர் ராபா்ட் போவா் (46) என்பது தெரிய வந்துள்ளது. அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச்சூட்டிற்கான உறுதியான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துடன், நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.