தான்சானியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஐசக் காம்வெல்வே கூறியுள்ளதாவது:
விக்டோரியா ஏரியில் வியாழக்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது.
இதில், 172 பேரின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், விபத்து நடந்து மூன்று நாள்கள் ஆகிவிட்டதால் பயணிகள் இனி உயிருடன் மீட்கப்படும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.
நவீன உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
உகாரா மற்றும் உகெரேவே தீவுகளுக்கு இடையே எம்வி நைரேரி என்ற படகு 200-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு விக்டோரியா ஏரியில் சென்று கொண்டிருந்தது.
இந்தப் படகு வியாழக்கிழமை உகாரா தீவுப் பகுதியை நெருங்கும் போது திடீரென ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், என்ஜின் அறையில் இருந்த ஒரு பொறியாளர் உள்பட 40 பேர் உயிர் தப்பினர்.
முதல் கட்ட விசாரணையில், 100 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த படகில் இருமடங்கிற்கும் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு காரணமான படகு நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.