பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடனுக்குடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியதாவது: தெற்கு ஆசிய நிலவரங்களை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார். இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவர் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்தும் வகையில் சர்வதேச சட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் பொதுச் செயலருக்கு கவலை அளித்துள்ளது என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.