இந்தியா, பாகிஸ்தான் இடையே மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இருநாடுகளுக்கு இடையில் மிகவும் மோசமான, ஆபத்தான் சூழ்நிலை நிலவுகிறது. இந்த போக்கு விரைவில் முடிய வேண்டும் என்பதை தான் அமெரிக்காவும் விரும்புகிறது. புல்வாமா தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 50 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே இதன் மீதான கடும் நடவடிக்கை குறித்து இந்தியா ஆழமாக சிந்தித்து வருகிறது.
பலதரப்பில் இதுகுறித்து பேசப்பட்டு வந்தாலும், இந்த விவகாரத்தில் அசாதாரண சூழ்நிலை மட்டுமே நிலவுகிறது. காஷ்மீரில் நடந்த சம்பவத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 1.3 பில்லியன் டாலர் உதவித்தொகையையும் நான் நிறுத்தியுள்ளேன். பாகிஸ்தானுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த ஆலோசிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் அதிக சலுகையை எதிர்பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் அமெரிக்கா நல்ல நட்புறவை மேம்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.