பியாங்யாங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச்சுவார்தை நடத்துவதற்காக ஹனோய் நகருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரயில் மூலமாக புறப்பட்டுச்சென்றுள்ளார்.
பல்வேறு உலக நாடுள் மற்றும் ஐ.நாபாதுகாப்பு கவுன்சிலின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்தது . குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு போரே மூளும் அளவுக்கு கடுமையான சூழல் நீடித்தது.
அந்த தருணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது அதிபர் ட்ரம்ப்பிடம் வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜோங் உன் உறுதி அளித்திருந்தார்.
இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவில் ஒரு இணக்கமான சூழல் உருவானாலும், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
எனவே மீண்டும் சந்தித்துப் பேச டிரம்ப், கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு பிப்ரவரி 27 & 28 ஆகிய தேதிகளில் வியட்நாமின் ஹனோய் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச்சுவார்தை நடத்துவதற்காக ஹனோய் நகருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரயில் மூலமாக புறப்பட்டுச்சென்றுள்ளார்.
வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் இருந்து ரயிலில் புறப்பட்டுள்ள அவர் 4,500 கி.மீட்டர் தூரத்தை, சுமார் 60 மணி நேரம் பயணம் மேற்கொண்டு வியட்நாமின் எல்லையோர நகரம் டாங் டாங்கை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம், மாநாடு நடைபெறும் ஹனோய் சென்றடைகிறார்.