புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, கடுமையான எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற இந்தியாவின் மனநிலையை நான் முற்றிலும் புரிந்து கொண்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சுமார் 50 வீரர்களை இந்தியா இழந்திருக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுத்து பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் இந்தியாவின் மனநிலை புரிந்துகொள்ளக் கூடியதே. தற்போது இரு நாடுகளுக்கு இடையே மிகவும் மோசமான, அபாயகரமான சூழல் நிலவுகிறது. ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல் காரணமாக மேலும் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
பல்வேறு நாடுகள் இத்தாக்குதல் குறித்து பேசி வருகின்றன. அமெரிக்காவும் இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழலைக் குறைக்கவே நாங்கள் விரும்புகிறோம். அந்நாடுகளுக்கு இடையேயான பயங்கரவாத நடவடிக்கைகளால் எந்தவொரு வீரரும் உயிரிழக்காமல் இருப்பதைக் காணவே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வந்தது. ஆனால், அந்த நிதியை அந்நாடு உரிய முறையில் பயன்படுத்தாததால், அங்கு பயங்கரவாதம் அதிகரித்தது. பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் திருப்திகரமாக செயல்படாததால், அந்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டிய சுமார் ரூ.9,100 கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது என்று அவர் தெரிவித்தார்.