சிலியில் சனிக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
சிலியில் சனிக்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் வட-மத்திய பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 அலகுகளாகப் பதிவானது.
வால்பராஸியோ, ஓ ஹிக்ஸின்ஸ், தலைநகர் சான்டியாகோ, அட்டகாமா மற்றும் காகியும்போ ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் நன்றாக உணரப்பட்டது என அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நிலநடுக்கத்தின் அதிர்வு பலமாக இருந்ததன் எதிரொலியாக, காகியும்போ நகரில் வசித்து வந்த இரு முதியவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். மலைப்பாங்கான பகுதிகளையொட்டிய பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததையடுத்து பாதுகாப்பு கருதி மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
சான்டியாகோவிலிருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரையையொட்டிய காகியும்போ மற்றும் செரினா நகரங்களில் வசித்த நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பு கருதி உயர்வான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை அதிகாரிகள் தெரிவித்த பின்னரே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 செப்டம்பரில் 8.3 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி தாக்கியதில் காகியும்போ நகரத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர்.