யேமனில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சவூதி கூட்டுப் படைகள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின. யேமன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் முதல் முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யேமனில் உள்ள கிளர்ச்சிப் படை மையங்கள் மற்றும் அவர்களது ஆளில்லா விமானங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை குறிவைத்து தலைநகர் சனாவில் சனிக்கிழமை இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
யேமனின் ஹுதைதா நகரில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையிலும் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.