மாஸ்கோ: ரஷ்ய கடல்பகுதியில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட தீ விபத்தில், இந்தியர்கள் உட்பட 11 பேர் பலியான தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கடல் பகுதியில் தான்சானியா நாட்டுக்கொடியுடன் கேண்டி மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய இரு இரு கப்பல்கள் பயணம் செய்துள்ளன. கேண்டி கப்பலில் 17 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 8 பேர் இந்தியர்கள். ஏனையோர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கப்பலான மேஸ்ட்ரோவில் 15 பேர் இருந்தனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர்.
ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இருந்திருக்கிறது. மற்றொரு கப்பலில் காலியான டாங்க் இருந்துள்ளது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் மாற்றம் செய்தபோது எதிர்பாராத விதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் மோசமான வானிலை நிலவுவதால் உயிரிழந்தவர்களின் உடல்களையும், கப்பலில் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.
சூழல் சரியானதும் மீட்பு பணிகளை தொடங்க ரஷ்ய கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.