ரஷிய விமானத்தை கடத்தி, வலுக்கட்டாயமாக தரையிறங்கச் செய்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து ரஷிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சைபீரியா பகுதியைச் சேர்ந்த சுர்குட் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவை நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்ட பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடத்தப்பட்டது.
தன்னிடம் ஆயுதம் இருப்பதாக விமானப் பணியாளர்களை மிரட்டிய இளைஞர் ஒருவர், அந்த விமானத்தை தரையிறக்குமாறு பணித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த விமானம் கான்டி-மான்சைஸ்க் என்ற நகரில் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் அதற்குள் புகுந்த பாதுகாப்புப் படையினர், விமானத்தைக் கடத்திய இளைஞரை கைது செய்தனர்.
மது போதையில் இருந்த அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் சுர்குட் நகரைச் சேர்ந்தவர் எனவும், பொருள்களை சேதப்படுத்தியது போன்ற சிறு வழக்குகளில் அவர் ஏற்கெனவே தண்டனை பெற்றவர் எனவும் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அந்த இளைஞர் மீது விமானக் கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.