மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-7: உதவிப் படைகள், கலப்புப்படைகள், சுதேசித்துருப்புகள், அரசனுடைய ராணுவ சம்பந்தமான கடமைகள்
உதவிப் படைகள் (Auxillary), கலப்புப்படைகள் (Mixed), சுதேசித்துருப்புகள் (native)
ஓரு அரசன் தற்காப்பிற்காக மற்றொரு அரசனுடைய படை உதவியைக் கோருவானாயின், அது உதவி சைனியம் எனப்படும். கூலிப் பட்டாளங்களைப் போலவே உதவிச் சேனையும் பயனற்றது. சமீபகாலத்தில் இம்முறை ஜுலியஸால் கைக்கொள்ளப்பட்டது. பெராரா மீது படையெடுத்த போது தன்னுடைய கூலிச் சேனையின் படுமோசமான தோல்வியைக் கண்டு விட்டு ஸ்பெயின் அரசன் பெராண்டோவிடம் சைனிய உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டான். தனிப்பட்ட முறையில் இப்படைகள் நல்லவையாகவே இருக்கலாம். ஆனால் அவ்வீரர்களைக் கடனாகப் பெறுவோருக்கு ஆபத்து, அவர்கள் தோற்றால் உதவி கோரியவனுக்குத் தோல்வி, அவர்கள் ஜெயித்தால் எஜமானனே அவர்களுடைய கைதியாகி விடுகிறான். பழைய சரித்திரத்தில் இதற்குப் பல உதாரணங்களிலிருந்தால், இன்றும் நினவைில் இருப்பது போப் ஜுலியஸினுடைய திருஷ்டாந்தத்தையே கூறுகிறேன். அவன் கைக்கொண்ட முறையை விடப் பகுத்தறிவற்ற முறையைக் காண முடியாது. ஏனெனில் பெராராவைப் போய் அவன் தானே அன்னியன் கையில் அகப்பட்டுக்கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக மூன்றாவது சங்கதி ஒன்று கிளம்பி, ஜுலியஸ் தன் செய்கையின் பலனை அனுபவிக்காமற் காப்பாற்றியது. அவனுடைய உதவிப் படைகள் ராவனாவில் (Ravenna) முறியடிக்கப்பட்டபோது அவர்களை ஜெயித்தவர்களை ஸ்விஸ்களிடம் தோற்று ஒடிப் போய் விட்டார்களாகையால் ஜுலியஸ் அவர்களால் சிறைப்படுத்தப் படாமல் தப்பினான். பகைவரைத் துரத்தியது மூன்றாவது மனிதர்களாகையால் உதவி சைனியமும் ஜுலியஸை ஒன்றும் செய்யச் சக்தி பெற்றிருக்கவில்லை. ஆயுத பலத்தை அடியோடிழந்த பிளாரன்டின்கள் பைஸாவைத் தாக்குவதற்குப் பத்தாயிரம் பிரஞ்சு வீரரைக் கூலிக்கு அமர்த்திக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுகாறும் நேர்ந்திராத பேரதாபத்து விளையவிருந்தது. கான்ஸ்டான்டிநோபிள் (Constantinople) சக்கரவர்த்தி தன் அண்டையிலிருக்கும் நாடுகளை எதிர்ப்பதற்குப் பத்தாயிரம் துருக்கர்களை கிரீஸ{க்குள் நுழைத்தான் யுத்தம் முடிந்த பின் அவர்கள் திரும்பிச் செயல்ல மறுத்தனர் அகவே கிரீஸ் மதவிரோதிகளிடம் அடிமைப்படுவதற்கு ஏதுவாயிற்று.
ஆகவே, வெற்றியை விரும்பாதவன் தான் இத்தகைய சைனியத்தின் உதவியை நாட வேண்டும். இவர்கள் கூலிச் சேனைகளைவிட அபாயமானவர்கள். இவர்கள் ஐக்கியமுள்ளவர்களாயும், பிறருக்கடங்கி ஒழுங்காயிருப்பவர்களாயும் இருந்தால் இவர்களால் ஏற்படும் அழிவு பூர்ணமானது. கூலி வீரர்கள் வெற்றியடைந்த பின் தன் எஜமானவனுக்குத் தீங்கு செய்வதென்றால் நாளாகும். அதற்குச் சந்தர்ப்பமும் வேண்டும். அவர்கள் ஒற்றுமையின்றி யிருப்பதாலும், அரசனிடம் சம்பளம் பெறுபவர்களாயிருப்பதாலும், அரசனால் அவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்ட மூன்றாவது மனிதன், அரசனைக் கொடுக்கச் செய்யும் போதுமான அவ்வளவு அதிகாரத்தை அவர்களிடம் உடனே பெற்றுவிட முடியாது. ஒரே வார்த்தையில், கூலிச் சைனியத்தினால் ஏற்படும் அபாயம் அவர்களுடைய கோழைத்தனத்தினால் போர் புரிய மனமின்மையாலும் வருகிறது. ஆனால் உதவிச் சைனித்தாலேற்படும் ஆபத்து. அவர்களுடைய தைரியத்ததால் வருவது. ஆகையால் புத்திமானான ராஜா இவ்வகை ராணுவ ஒத்தாசையை நாடாமல் தன் சொந்த சேனைகளின் பலத்தையே நம்பவேண்டும். அயலார் பலத்தைக் கொண்டு ஜெயிப்பதை வட சொந்த மனிதர்களுடன் தோற்பதே நல்லது. அன்னியருடைய சக்தியால் அடையும் வெற்றி உண்மையானதல்ல. இதற்கு ஸீஸர் போர்ஜியாகவே சான்று. அவன் முற்றிலும் பிரஞ்சு வீரர்களே நிறைந்த உதவி சைனியத்துடன் ரோமானாவில் நுழைந்தான். இமோலாவையும்(Imola) போர்லியையும்(Forli) கைப்பற்றினான். பிறகு அவர்களை நம்பமுடியாது போல் இருந்தால், கூலி சைனியத்தைக் கூட்ட நினைத்தான். அவர்கள் உதவிப்படைகளைவிடச் சற்று அபாயம் குறைந்தவர்களென்று கருதி, ஆர்ஸினியையும் விடலியையும் அமைத்துக் கொண்டான். இவர்களும் நம்பிக்கைத் துரோகிகளாயும் அபாயமானவர்களாயும் இருந்தனராகையால், அவர்களை அடக்கி விட்டுக் தன் சொந்த ஆட்களையே வைத்துக் கொண்டான். பிரஞ்சுக்காரரை நம்பியிருந்தபோதோ, அல்லது ஆர்ஸ்னியையும் விடலியையும் துணைவர்களாய்க் கொண்டிருந்த போதோ அவனுக்கிருந்த மதிப்புக்கும் சொந்த மனிதர்களை மட்டுமே நம்பியிருந்தபோது அவனுக்குக் கிடைத்த கீர்த்திக்கும் எவ்வளவு வித்தியாசம்: அவனுடைய கியாதி பெருகிக்கொண்டே வந்தது. அவனுடைய சேனைக்கு அவனே தனி. ஏஜமானன் என்று கண்ட ஒவ்வொருவரும் அவனுக்கு இதுவரை காணாத மரியாதையை அளித்தனர்.
கோலியாத்
சமீபகாலத்திய இத்தாலியின் சரித்திரத்திலிருந்து நான் வெகு தூரம் போக விரும்பவில்லை. ஆனால் ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கும் ஹீரோவைப் பற்றிச் சொல்லாமலிருக்க முடியாது. இவன் ஸிராகஸர்களால் சேனைத் தலைவனாக நியமிக்கப்பட்டதும் அச்சைனியம் இத்தாலியின் கூலிப்படைகளைப் போலவே வகுப்பட்டிருப்பதைக் கண்டான். அதை வைத்துக் கொள்வதும் அபாயம், கலைத்து விடுவதும் ஆபத்து என்று அவர்களெல்லோரையும் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுவிட்டு, அது முதற் பிறர் சகாயத்தை நாடாமல் தன் சொந்தப் படைகளையே உபயோகித்துக் கொண்டான். இந்த அம்சத்தை விளக்குவதில் பைபிஸில் பழைய ஏற்பாட்டில் இருக்கும் கதையை எடுத்துக் கூறலாம். பிலிஸ்திய (Philistine) வீரன் கோலியாத்துடன்(Goliath) யுத்தத்துக்குப் போவதாகத் தாவிது (David) ஸாவிடம் (Saul) சொன்னபோது, ஜஸால் அவனுக்கு உற்சாமளிப்பதற்குகாகத் தன்னுடைய கத்திகவசங்களை அணிவித்தான். தாவீது அவற்றை அணிந்துப் பார்த்துவிட்டு அவற்றைப் போட்டுக்கொண்டு நன்றாக யுத்தம் செய்ய முடியாதென்றும், தன் சொந்தக் கத்தி கேடயங்களுடனே பகைவனைச் சந்திப்பது மேல் என்றும் கூறி மறுத்து விட்டான். சுருக்கிக் கூறுமிடத்து அயலாருடைய ஆயுதம் தவறிவிடும், தனக்கும், அல்லது இடைஞ்சல் செய்யும். பதினோராவது லூயியின் தந்தையான ஏழாவது சார்லஸ்அதிர்ஷ்ட பலத்தாலும் தைரியத்தாலும் ஆங்கிலேயரிடமிருந்து பிரான்ஸை, விடுவித்த பின்னர் சொந்தப் படை பலம் அத்தியாவசியமென்பதை உயர்ந்துதன் ராஜ்யத்தில் போர் வீரர்களைத் திரட்டினான்.
பிறகு அவன் மக்கள் லூயி காலாட்களை நீக்கிவிட்டு, ஸ்விஸ் ஜாதியினரைக் கூலிக்கமர்த்திக் கொண்டான். அந்தப் பிழை இன்னும் மற்றவர்களால் பின் பற்றப்பட்டு அந்நாட்டின் அபாயத்துக்கேதுவாயிருப்பதைக் காணலாம். ஸ்விஸ்களுக்கு அவ்வளவு கௌரவத்தைக் கொடுத்துப் பிரான்ஸ் தன் சைனியத்தின் மனவுறுதியைக் கலைத்து விட்டது. காலாட் படையோ கலைக்கப்பட்டு விட்டது. மற்ற படைகளும் அன்னியர் உதவியைக் கோரவேண்டியிருக்கிறது. ஸ்விஸ் துரப்புகளுடன் சேர்ந்தே சண்டை செய்து பழகிப் போய் விட்டதால், ஸ்விஸ்களில்லாமல் தாங்கள் தனியே போர் புரிந்து ஜெயிக்க முடியாதென்று அவர்கள் நினைக்கிறார்கள். இதிலிருந்து ஸ்விஸ்களை எதிர்க்கப் பிரான்ஸுக்குப் போதிய சக்தி கிடையாதென்றும், அவர்களுடைய துணை இல்லாவிட்டால் பிறரை எதிர்க்கவும் துணியார் என்றும் ஏற்படுகிறது. பிரஞ்சு சைனியங்கள் இவ்விதம் கலப்புப் படைகளாக இருக்கின்றன. ஒரு பகுதி சொந்தப் படைகளையும் ஒரு பகுதி கூலித் துருப்புகளையும் கொண்டவை, பூராவும் கூலி வீரர்களை, அல்லது முழுதும் துணை வீரர்களைக் கொண்ட பட்டாளங்களை விடச் சிறந்தவை. ஆனால் தேசியப் படைகளை விட வெகு மட்டமானவை. இந்த உதாரணமே போதும், சார்லஸின் ராணுவ ஏற்பாடுகள் மட்டும் நன்றாக விருத்தி செய்யப்பட்டு பாதுகாக்கப் பட்டிருந்தால். பிரான்ஸ் ராஜ்யத்தை அசைக்க ஒருவராலும் முடியாது உலக ஞானம் இல்லாதவர்கள், புதுமைகளைச் செய்யத் தொடங்கி, அவை முதலில் தித்திப்பதைக் கண்டு உள்ளேயிருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் போகிறார்கள். இதுவும் நான் ஏற்கனவே கூறிய உடலை உருக்கும் ஜ்வர நோயைப் போன்றதுதான். தேசத்தில் உபத்திரங்கள் எழும்போதே அதைத் தெரிந்து கொள்ளத் தவறும் அரசன் உண்மையான அறிவாளியல்ல. வெகு சிலரே அந்த ஞானத்தைப் பெற்றவர்களாயிருப்பார்கள். ரோம் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் காத்தியக் (Goths) கூலிகளைக் கொண்டு படை திரட்டியதுதான் அது முதற்கொண்டுதான் ரோம்ர்களுடைய பலம் குன்றத் தொடங்கிற்று. சாம்ராஜ்யத்தினால் கிடைத்த சகலவிதமான பயன்களையும் காத்தியர்கள் அடைந்தனர்.
இறுதியாக, தன் சொந்தப் படை பலமில்லாவிட்டால், ஒரு அரசனும் பத்திரமாயிருக்க முடியாது. அவன் ஆபத்து காலத்தில் தற்காப்புக்குரிய சாதனங்கள் சரியாக இராமல் பாக்கியத்தையே தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டும். தன் சொந்தக் குடிகளையும் தன்னைச சார்ந்திருப்போரையும் கொண்டமைத்தது, சொந்தச் சைனியம் எனப்படும். மற்றவையெல்லாம் கூலிப் படைகள் அல்லது துணைப் படைகள் எனலாம். சேர்ந்தத் துருப்புகளை ஒழுங்காக அமைக்கும் விதத்தை முன் சொல்லப்பட்ட நான்கு அரசர்களுடைய வழிகளிலிருந்து எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். மஹா அலெக்ஸாண்டருடைய தந்தையான பிலிப்பும் இன்னும் பல குடியரசுகளும் தங்கள் சேனைகளை எவ்வாறு வகுத்தனரென்பதும் கவனிக்கத் தக்கது. இப்படிப்பட்ட திருஷ்டாந்தங்கள் இருக்கும்போது, இதைப்பற்றி அழுத்திக் கூற வேண்டியதில்லை.
அரசனுடைய ராணுவ சம்பந்தமான கடமைகள்
ஒரு அரசனுக்கு யுத்தம் அதன் ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள், இவற்றைத் தவிர வேறு நினைவாவது லட்சியமாவது இருக்கலாகாது. அதிகாரத்திலருப்பவனுக்கு அத்தியாவசியமான கலை அது ஒன்று தான். அரசனாகவே பிறந்தவர்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல. சாதாரண நிலைமையில் இருப்பவர்களைக்கூட ராஜ பதவியை அடையும் படி செய்ய வல்ல மகிமை அதற்குண்டு. இதற்கு மாறாக, யுத்தத்தைப் பற்றி அதிகம் நினையாமல், லீலா வினோதங்களிலேயே லயித்துப் போய் சொகுசாயிருக்கும் ராஜா தன் ராஜ்யத்தை இழப்பது கண்கூடு. ராஜ்யங்கள் இழக்கப்படும் முக்கியமான காரணம், யுத்தக் கலையை உதாசீனம் செய்வது தான். ராஜ்யங்களைப் பெறுவதற்கு, இக்கலையில் நிபுணத்துவம் அடைவது தான் வழி. சிறந்த படைபலம் பெற்றிருந்ததால், பிரான்ஸிஸ்கோ ஸ்போர்ஸா சாதாரண ஸிதிதியிலிருந்து மிலன் நகரத்து டியூக் ஆனான். அவனுடைய மைந்தர்களோ போரின் கஷ்டங்களையும் களைப்பையும் தவிர்க்க விரும்பியதால் சிற்றசர்களாயிருந்தவர்கள் சாதாரண ஸ்திதிக்கு வந்துவிட்டார்கள். ஆயுதபலம் இல்லாவிட்டால் எவ்வளவோ தீமைகள் நேருவதுடன் மன்னன் அவமதிக்கவும் படுகிறான். அவமதிக்கப்படுவது மிகவும் வெட்கக் கேடான விஷயம். ஆகையால் அரசன் அதைத் தவிர்க்க வேண்டும். இதைப்பற்றிப் பிறகு விளக்கிக் கூறுவேன், சேனா பலமுள்ளவனுக்குக்கும் அது இல்லாதவனுக்கும் இருக்கும் வித்தியாசம் அளவற்றது. ஆயுத பலமுள்ளவன் அப்பலமில்லாதவனிடம் மனமுவந்து வணங்கி நடப்பானென்று எதிர்பார்க்க முடியாது. ஆயுதமில்லாதவன் ஆயுதபாணிகளான தன் சேவகர்கள் நடுவில் பத்திரமாயிருப்பானென்றும் நினைக்க முடியாது. ஒருவர் அலட்சியத்துடனும் மற்றவர் சந்தேகத்துடனும் இருப்பதால், இருவரும் சேர்ந்து ஒரு காரியம் செய்வது கஷ்டம். ஆகையால் ராணுவ அறிவில்லாத அரசன் ஏற்கனவே கூறப்பட்ட மற்ற இன்னல்களுக்குள்ளாவது மன்றித் தன் சொந்த ஆட்சிகளின் மதிப்பைப் பெறவும், அவர்களிடம் நம்பிக்கை வைக்கவும் இயலாதவனாய் விடுவான்.
ஆதலால் அவன் யுத்தப் பயிற்சிகளைத் தவிர வேறு எவ்விஷயத்திலும் மனதைச் செல்லவிடலாகாது. போர் நிகழும் சமயத்தை விடச் சமாதான காலத்தில் அவன் அதை அதிகமாய்ப் பயிலவேண்டும். செயல் மூலமாயும் ஆராய்ச்சி மூலமாமயும் பயிற்சி பெறலாம். செயல் மூலம் எப்படியென்றால், அவன் தன் மனிதர்களை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் தேகாப்பியாசம் செய்யும்படி செய்வதுடன், தானும் இடைவிடாமல் வேட்டையில் ஈடுபட வேண்டும். இவ்வகையில் அவன் தன் சரீரத்தை வஜ்ரமாக்கிக் கொண்டு, எந்த கஷ்டத்தையும் தாங்கும் வன்மை பெறலாம். அத்துடன் கூட நாட்டின் இயல்பையும் அறிந்து கொள்ளலாம். மலைகளின் உயரம் எவ்வளவு, பள்ளத்தாக்குகள் எப்படித் திறந்த வெளியுடன் சேர்கின்றன. சம பூமிகள் எங்கிருக்கின்றன. சதுப்பு நிலங்கள் முதலியவற்றின் இயற்கை என்ன, என்பது போன்ற விஷயங்கள் அவன் நேரில் கண்டு கொள்ளக் கூடும். இதையெல்லாம் அவன் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த அறிவு அவனுக்கு இருவகைகளில் பயன்படும். முதலாவது தன் நாட்டைப் பற்றிய விஷயங்களை நேரில் அறிந்து அதைப் பாதுகாக்கும் விதம் எப்படி என்று தெரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது, நாட்டின் ஒரு பகுதியிற் பெற்ற ஞானமும் அனுபவமும் அவசியம் நேரிடுங்கால் மற்ற பாகங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவும். உதாரணமாக டஸ்கனியின் மலைகளும், பள்ளத் தாக்குகளும், சம நிலங்களும் நதிகளும், மற்ற மாயாணங்களிலிருப்பவற்றை ஏறக்குறைய ஒத்திருக்கின்றன. ஆகவே ஒரு மாகாணத்தில் பெற்ற அறிவைக் கொண்டு மற்ற மாகாணங்களின் விவரங்களையும் சுலபமாக ஊகிக்கலாம். இந்த சாமார்த்திய மில்லாதவன் தலைவனாவதற்குரிய அதிக முக்கியமான குணம் இல்லாதவனாகிறான். ஏனெனில், பகைவனிருப்பிடத்தை அறிதல், பாளையத்தை வசதியான இடத்தில் இறக்குதல், சேனைகளை நடத்துதல், நகரங்களை முற்றுகையிடுதல், முதலியவற்றை வெற்றிகரமாய்ச் செய்வதற்கு இந்த அறிவு உதவுகிறது.
பிலோபோமன்
அக்கேயா (Achaei) அரசனான பிலோபோமன் (Philopoemen) எழுத்தாளர்களால் பிரமாதமாகப் புகழப்பட்டவன். அவனுடைய மற்ற கியாதிகளுக்கிடையில் சிறப்பாக, சாந்தி நிலவும் சமயத்தில் கூடப் போர் முறைகளைப் பற்றிய ஞாபகமாகவே இருந்ததற்காக கொண்டாடப்படுகிறான். நகரத்தின் சுற்றுப் புறங்களுக்கு நண்பர்களுடன் சென்றால் அடிக்கடி அங்கங்கே நின்று அவர்களின் எதிரி அந்த மலைமேலும் நாம் இங்கே நமது சைனியத்துடனும் இருந்தோமென்றால் யாருக்கு நல்லது? நாம் ஒழுங்கு தவறாமல் அவனை நெருங்குவது எங்ஙனம்? நாம் பின்னடைய வேண்டின் என்ன செய்ய வேண்டும் அவன் பின்னிட்டோடி கொண்டே, ஒரு சைனியத்துக்கு ஏற்படக் கூடிய எல்லாவிதமான சங்கடங்களையும் அவர்கள் முன்வைத்து அவர்கள் கூறும் அபிப்பிராயத்தைக் கேட்பான். தன் அபிப்பிரயத்தையும் சொல்வான். வாதப் பிரதிவாதங்கள் செய்வான். இப்படி இடைவிடாமல் யோசனை செய்வதால்’ நிஜமாகவே படைகளைச் செலுத்தும்போது, அவன் முன்னதாகவே தாயராயில்லாத ஒரு சங்கடமும் அவனுக்கு நேரமுடியாது. மனதில் பயிற்சிக்காக அரசன் சரித்திரம் படித்துத் திறமை வாய்ந்த பெரியோர்களின் செயல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் யுத்தகாலத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களுடைய வெற்றி தோல்விகளுடைய காரணங்களை அறிந்து வெற்றி பெறும் வழியை அனுசரிக்கவும் தோல்விக்கு எதுவானற்றை விலக்கவும் கற்க வேண்டும். பெரியோர்களுடைய அருஞ்செயல்களை நினைப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விடப் புகழும் பிராபல்யமும் வாய்ந்தவர்களை மாதிரியாய்க் கொண்ட அவர்களை அனுசரித்தவர்களுடைய திருஷ்டாந்தத்தைப் பின்பற்ற வேண்டும். மஹா அலெக்ஸாண்டர் ஆகிலஸ்ஸையும் (Achilles), ஸீஸர், அலெக்ஸாண்டரையும், ஸிபியோ (Scipio)) ஸைரஸ்ஸையும்(Cyrus) போல நடக்க முயன்றதாகக் கூறுகிறார்கள். ஜெனோபன் (Xenophon)) எழுதிய ஸைரஸின் வரலாற்றை வாசிப்பவர்கள் ஸிபியோ எவ்வளவு நன்றாக ஸைரஸிப் பின்பற்றினான் என்பதை அறிவார்கள். தூய்மை, ஒத்துப்போகும் குணம், மனிதத்தன்மை, தாராள நோக்கம், முதலியவற்றில் ஸைரஸைப் போலவே ஸிபியோ விளங்கினான் என்று ஜெனோபன் எழுதியிருப்பதிலிருந்து தெரிகிறது. புத்திமானான அரசன் சமாதான காலத்தில் சோம்பலாயில்லாமல் இம்மாதிரி முறைகளைப் பயில வேண்டும். தான் கற்ற முறைகளை உழைத்துப் பழகிய வண்ணம் இருக்க வேண்டும். அப்போதுதான் அதிர்ஷ்ட சக்கரத்தின் சுழற்சியால் ஏற்படும் அதிர்ச்சிகளை எதிர்த்துக் கஷ்டங்களை அகற்றும் ஆற்றலைப் பெறலாம்.
தொடரும்...
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475