மத அரசியல்-3: ஜூடாயிஸம்

இது யூதர்களுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. ஒரு நம்பிக்கை உதித்தது. மன வலிமை கிடைத்தது. இறைதூதர் அரச வம்சத்தில் உதிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர்.
மத அரசியல்-3: ஜூடாயிஸம்


  
ஜூடாயிஸம் (Judaism)

ஜூடாயிஸம் - யூதர்களின் மதம், கிறித்துவ மதத்தைவிட பழைய ஏற்பாட்டில் உள்ள கருத்துகளின் அடிப்படையில் உருவான இந்த மதம் ஒரே இறைவனைப் பற்றி பேசுகிறது. அவர் தான் உலகத்தைப் படைத்தவர். அவர்தான் உலகை ஆள்பவர். அவர் சர்வ சக்தியுள்ளவர். எதையும் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர் மேலும் அவர் நியாயமானவர். கருணை உள்ளவர். ஒவ்வொருவரும் கடவுளின் பிம்பமாகத் தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள் போன்றவை யூதர்களின் நம்பிக்கை.

ஜூடாயிஸம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னரானது. இது தூய்மை. நல்லொழுக்கம ஆகியவற்றுக்கு உதாரணமாக இருக்கத்தக்க மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று கருதியே இறைவன் யூதர்களைப் படைத்ததாக ஒரு நம்பிக்கை யூதர்களிடம் உண்டு.  கி.மு. 1812ஆம் ஆண்டு ஆதாம் ஏவாளின் பத்தொன்பதாவது  தலைமுறையில் உதித்த பேரன் ஆபிரகாம்.  இவர் யூத இனத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார். இஸ்ரேலின் யூத இனம் இவரில் இருந்துதான் தோன்றியது. அவர்களின் கடவுள் யாவே (YHWH/Yahweh), அவர் முன்பாகத் தோன்றி, யூத இனத்தின் தலைவராக உன்னை நியமிப்பேன் என்று வாக்களித்தார். இந்த வாக்குறுதியை உறுதியென்று நம்பிச் செயல்பட்டார் ஆபிரகாம். 

ஆபிரகாம் தன் மகன் ஈசாக் பிறந்த எட்டாம் நாளன்று அவருக்கு விருத்தசேதனம் செய்து வைத்தார். விருத்தசேதனம் என்றால் சுன்னத் என்று பொருள். ஆபிரகாமிற்கு கடவுள் அளித்த வாக்குறுதியை ஈசாக் பிறப்பின் மூலமாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.  தாங்கள் ஆபிரகாமின் மரபு வழித் தோன்றல்கள் என்பதில் யூதர்கள் மிகவும் பெருமிதம் கொள்கின்றனர். நாங்கள் ஆபிரகாமின் வம்சாவழியினர் யாருக்கும் அடிமையாக இருந்தது கிடையாது. இருக்கப்போவதும் இல்லை என்று இயேசுவிடம் யூதர்கள் வாதம் செய்தனர்.

அவரது அன்பு மனைவி சாரா. இருவருக்கும் குழந்தை பாக்யம் கிட்டாத காரணத்தால் ஆகார் என்னும் வேலைக்காரப் பெண்ணை சாராவே ஆபிரகாமுக்கு மணமுடித்து வைத்தார்.  ஆபிரகாம் - ஆகாருக்கு இஸ்மாயில் என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  இதன்பின்னர் அதிர்ஷ்டவசமாக சாராவுக்கு குழந்தை பேறு கிடைத்தது. அந்த ஆண் மகனுக்கு ஈசாக் என்று பெயர் சூட்டப்பட்டது.  இதன்பின்னர் சாராவுக்கும், ஆகாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு சண்டையாக வளர்ந்தது. இதனையடுத்து தனது குழந்தை இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் ஆகார். இவர்களின் தகராறு உலகின் மிகப் பெரிய இரு மதங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிட்டது என்பதே வரலாற்று உண்மை.  அதாவது ஈசாக்கின் வழிவந்தோர் யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். இஸ்மாயில் வழித்தோன்றல்கள் அரேபியர்கள் ஆனார்கள். 

யூதர்களின் புனித நூல் தோரா (Torah). கிறிஸ்தவர்களின் புனித நூல் பழைய ஏற்பாடு. முஸ்லீம்களின் குர் ஆன் ஆகிய மூன்று புனித நூல்களும் இதனைத் தெரிவிக்கின்றன. எகிப்து நாட்டில் ஈசாக்கின் வம்சத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டனர். அப்போது கடவுளின் கட்டளையின் பேரில் அங்கு  தோன்றிய இறைதூதர் மோசஸ் அவர்களை மீட்டார். மேலும், யூதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உலகிற்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இறைவழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து கட்டளைகளை மோசஸ் அவர்களுக்கு வழங்கினார்.  இது இறைவனின் கட்டளை என்பதையும் மோசஸ் தெளிவாக்கினார்.

இந்தப் பத்து கட்டளைகளின்படி தங்களுக்கு கடவுள் ஒருவர் மட்டுமே என்று யூதர்கள் நம்பினர். யூத மதம் மிகப் பழமையானது என்பதால் அதில் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் குறைவே இல்லை. நிறைய விழாக்கள் உண்டு. வழிபாடுகள் அதிகம் தங்கள் சடங்குகளின்  போது முன்னோரின் துயரங்கள் நினைத்துப் பார்க்கப்பட்டது. திருமண விழா உட்பட அனைத்து சடங்குகளிலும் இது அவர்களின் முக்கிய சடங்காக இருந்தது.

கடவுள் இந்நிலவுலகைப் படைத்தபோது உயிரினங்கள் உட்பட அனைத்தையும் முதல் ஆறுநாட்கள் படைத்தார் என்றும், ஏழாவது நாள் நன்றாக ஓய்வெடுத்தார் என்றும் யூதர்கள் நம்பினர்.  எனவேதான் வாரத்தில் ஆறு நாட்கள் ஓய்வின்றி உழைக்கும் யூதர்கள், ஏழாவது நாளான சனியன்று நல்ல ஓய்வெடுப்பார்கள். யார் அழைத்தாலும் வேலை எதுவும் செய்யவே மாட்டார்கள். சமையலுக்குக்கூட விடுமுறைதான். தேவையான சமையலை முதல் நாளே முடித்து வைத்துவிடுவர்.  ஆபிரகாம் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் தான் யூதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம். இம் மூன்று மதங்களுமே ஒரே கடவுள் என்னும் கொள்கையைக் கொண்டவை. ஆயினும் காலப்போக்கில் இம்மதங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டத் தொடங்கி எதிரிகள் ஆகின.

இவர்களுக்கு இடையே பகை ஏற்படுவதற்கு முழுமூல காரணம் எதுவென்றால் இஸ்ரேலின் வசமுள்ள ஜெருசலேம் நகரம் தான். இம்மூன்று மதங்களின் முக்கிய சங்கமங்கள் நடைபெறும் புனித நகரமாக விளங்குகிறது ஜெருசலேம். பாலஸ்தீனத்தில் தலைநகராக ஜெருசலேம் விளங்குவதை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால் யூதர்களின் மிக முக்கிய புனித நகரமாக ஜெருசலேம்  விளங்குகிறது. வெளி நாடுகளில் வசிக்கும் யூதர்கள் கூட தாங்கள் பிரார்த்தனை செய்யும்போது ஜெருசலேம் நகரம் இருக்கும் திசையை நோக்கித் தான் வணங்குகிறார்கள்.

யூதர்கள் கடவுளை பிரார்த்தனை செய்கிறபோது நான் எனது என்று கூறமாட்டார்கள் நாம் நமது என்றுதான் கூறுவார்கள். ஒரு இடத்தில் யூதன் ஒருவன் நுழைந்து விட்டால் போதும் அடுத்த சில நாட்களில் அங்கு யூதர்கள் குவியத் தொடங்கி விடுவார்கள். இப்படி தான் மட்டுமே வளராமல், தம் இனத்தையும் வளர்த்தார்ள். ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றால் அங்கு யூதர்களும் அதிகரித்துவிடுவார்கள். யூதர்கள் வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்கள். அதுவும் அவர்கள் மேல் வெறுப்பு வளர்வதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

தங்கள் இனமே உலகில் உயர்ந்த இனம் என்றும், கடவுளின் விருப்பத்திற்குரிய இனம் தங்கள் இனமே என்றும், உலகில் மனித இனம் எப்டி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவே கடவுள் தங்களை படைத்தார் என்றும் அவர்கள் முழுமையாக நம்பினர்.  கி.மு.பத்தாம் நூற்றாண்டில் இருந்தே இந்நகரில் யூதர்கள் அதிக அளவில் வசித்தனர். இங்குள்ள டெம்பிள் மவுண்ட் கோயில் யூதர்களுக்கு மிகவும் முக்கியமானது. விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை இந்த ஆலயத்துக்குக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்கிறது யூதர்களின் புனித நூல். அதிக அளவு விளைச்சல் என்றால் பிறருடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதும் விதி. 

டெம்பிள் மவுண்ட் கோயில், ஜெரூசலம்

டெம்பிள் மவுண்ட் கோயில் சாலமோன் மன்னனால் கி.மு.957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்றைப் புரட்டி பார்த்தால் இக்கோயில் பலமுறை இடிக்கப்பட்டும், பின்னர் கட்டப்பட்டுமாக இருந்துள்ளது. தற்போது இக்கோயில் இருந்த நினைவாக ஒரு சுவர் மட்டுமே காணப்படுகிறது. அதனையே யூதர்கள் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடவுள் வானத்தையும் பூமியையும் இன்னும் பல கோள்களையும் படைத்தார்.  இவை அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை மனிதன் மீது நம்பிக்கை வைத்து அளித்தார்.

சாலமோன்

அப்போது கடவுள் மனிதனோடு நேரில் தொடர்பு கொண்டிருந்து அவனது துன்பங்களுக்கு உற்ற வழிகாட்டதலைச் செய்து வந்தார். சில தீர்க்கதரிசிகள் மூலம் மனிதர்கள் வாழ வேண்டிய நல்ல வழிமுறைகளைக் கட்டளைகளாக அளித்தார்.  அதில் குறிப்பிடத்தக்கவர் சாலமோன் ஒன்றிணைந்த யூத இஸ்ரேல் நாட்டின் மன்னர்களில் ஒருவர் என்று விவிலிய நூல்கள் குறிப்பிடுகின்றன.

தால்முத்

இவர் 48 இறைவாக்கினருள் ஒருவர் என்கிறது யூத சமய நூல் தால்முத் (Talmud). மன்னர் தாவீது மற்றும் அரசி பத்சபா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் சாலமோன். வட பகுதியாக இருந்த இஸ்ரேலையும், தென் பகுதியாக இருந்த யூதத்தையும் ஒருங்கே இணைத்து வலுவான நாடாக மாற்றியவர் தாவீத்.

இவருக்கு முன்பாக சவுல் இஸ்ரேலின் மன்னராக இருந்தார். சவுல், தாவீத்திற்குப் பின்னர் அதன் மூன்றாவது மற்றும் கடைசி மன்னராக இருந்தவர் சாலமோன்.  சாலமோன் ஆட்சிக்குப்பிறகு அந்நாடு இஸ்ரேல் என்றும், யூத நாடு என்றும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. சாலமோனின் ஆட்சிக்காலம் கி.மு. 970 முதல் கி.மு 931 வரை என்று தெரிகிறது. சாலமோன் முதன்மையான இறைவாக்கினர் என்கிறது குர்ஆன். சாலமோன் மிகச் சிறந்த ஞானி என்கிறது விவிலியம்.  சாலமோன்தான் ஜெருசலேமில் புகழ்மிக்க முதல் கோயில் கட்டினார். டெம்பிள் மவுண்ட் மவுண்ட் சீயோன் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இது கி.மு. 900 ஆண்டுகளில் கட்டப்பட்டது. கி.மு. 586 ஆம் ஆண்டு பாபிலோனியர்கள் இதனை இடித்து துவம்சம் செய்தனர். தீயிட்டுக் கொளுத்தினர். யூத இளைஞர்களை அடிமைகளாக்கி தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றனர். இதனால் யூதர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியின் எல்லைக்கே சென்றனர். மிகுந்த மனவேதனையில் தத்தளித்தனர். அப்போது தோன்றிய  தீர்க்கதரிசிகள் தாவீதின் கோத்திரத்தில் இறைதூதர் 'மேசியா" தோன்றுவார். அவர் யூத நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வார். யூத மதத்தைக் கட்டி காப்பார். சாலமோன் கோயிலைத் திரும்பவும் கட்டி எழுப்புவார்' என்றனர்.

இது யூதர்களுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. ஒரு நம்பிக்கை உதித்தது. மன வலிமை கிடைத்தது. இறைதூதர் அரச வம்சத்தில் உதிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். இந்நிலையில் பாபிலோனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடிமையாக இருந்து யூதர்களுக்கு விடுதலையும் கிடைத்தது. கி.மு. 516 ஆம் ஆண்டு மீண்டும் ஜெருசலேமில் சாலமோன் கோயிலைக்கட்டி எழுப்பினர்.  மீண்டும் கி.மு. 43 ஆம் ஆண்டு யூதர்கள் மிகப் பெரிய கிளர்ச்சியில் இறங்கினர். ஆனால் அதுவும் ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது..கி.மு. 20 ஆம் ஆண்டு மகா ஏரோது என்பவர் ஜெருசலேம் கோயிலை பெரிய அளவில் விரிவாகக் கட்டியெழுப்பினார். இரண்டாம் கோயில் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இங்கு யூதர்களின் வழிபாடு மீண்டும் தொடங்கின. இக்கோயில் கட்டுமான பணிகள் 46 ஆண்டுகளாக நடந்தது என்கிறது விவிலியம்.

இந்நிலையில் டைட்டஸ் என்னும் ரோமத் தளபதியின் தலைமையில் ஜெருசலத்திற்கு கி.பி.70 ஆம் ஆண்டு ரோமானியப் படை புகுந்து இந்த ஆலயத்தைத் தகர்த்தெறிந்தது. ஒரேயொரு சுவர் மட்டுமே அதிலிருந்து தப்பித்தது. இந்த மேற்குச் சுவர்தான் இப்போதும் யூதர்கள் வழிபடும் புனிதக் கோயிலாக இருந்து வருகிறது. இந்த சுவற்றுக்குத் தான் அவர்கள் வழிபாடு செய்கின்றனர். தங்கள் கடவுளின் கட்டளைப்படி தேவதூதர் ஒருவர் இந்த மண்ணில் அவதரிப்பார் என்றும், இடிக்கப்பட்ட ஆலயத்தை அவர் மீண்டும் கட்டி எழுப்புவார் என்றும் யூதர்கள் இப்போதும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு வரலாற்று உண்மையை நாம் மறுபடியும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். யூதர்கள் இயேசு பிரானை தங்கள் கடவுளின் ஆணைப்படி தோன்றிய இறைதூதர் என்பதை ஏற்க மறுத்தனர். இந்நிலையில்தான் இயேசு கிறிஸ்து அவதரித்தார். இவர் தான் தங்களின் இறைதூதர்  மேசியா என்று சிலம் நம்பத் தொடங்கினர்.  ஆனால் மற்றவர்களோ இதை நம்பத் தயாராக இல்லை. தாவூதின் அரச குடும்பத்தில் தான் மேசியா பிறப்பார் என்றும் தொழுவத்தில் பிறந்த இயேசு நிச்சயமாகத் தாங்கள் எதிர்பார்க்கும் மேசியா கிடையாது என்றும் உறுதியாக நம்பினர். இயேசு யூத இனத்தைச் சார்ந்தவராக இருந்தும், அரச குடும்பத்தில் பிறக்காத காரணத்தால் அவரை மேசியா என்று நம்ப மறுத்தார்கள்.

இயேசுவிடம் மகா சக்தி இருந்ததையும், அதன்மூலம் மக்களுக்கு அவர் நற்போதனைகளை வழங்கியதையும் யூதர்களில் பலர் வெறுத்தனர். தங்களின் மேசியா நிச்சயமாக அவதரிப்பார் என்றும், தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளும் இயேசுவைக் கொன்றுவிட வேண்டும் என்றும் அவர்கள் துடித்தனர். ஜெருசலேத்தை ஆட்சி செய்த ரோமானியர்களிடம் இயேசுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி அவரைச் சிலுவையில் அறைந்து தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற கருத்து அப்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. இதுவே யூதர்கள் மீது உலக மக்கள் வெறுப்பு கொள்வதற்கும் காரணமாக அமைந்தது. ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் யூத மக்களை வெறுத்து, லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்ததற்கு இதுவே முக்கிய காரணம். இது முதல் யூதர்கள் இன்றளவும் உலக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டே இருந்து வருகிறார்கள். இன்றும் இயேசுவை தங்கள் தீர்க்கதரிசிகள் கூறிய மேசியா என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எப்படியும் இறைத்தூதர் மேசியா பிறந்து வந்து தங்கள் கோயிலைக் கட்டி எழுப்புவார் என்று இன்றும் யூதர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவரது ஆட்சிக் காலத்தில் புகழ்மிக்க கட்டடங்கள் பல கட்டப்பட்டன. பேரமைதி நிலவியது செல்வம் செழித்தோங்கியது. சேபா நாட்டு அரசியார் சாலமோனின் அறிவுத்திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். இவருக்கு எழுநூறு அரசகுலத் பெண்கள் மனைவியராகவும், முன்னூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தனர். சாலமோனின் முதுமை காலத்தில் இப்பெண்கள் அவரை தவறான வழியில் திருப்பி விட்டனர். அதாவது வேற்று தெய்வங்களை வணங்குமாறும், பின்பற்றுமாறும் தூண்டிவிட்டனர். சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோமையும் வழிபடலானார்.

இதனால் தனது தந்தை தாவீத் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியதைப் போல் இல்லாமல் இருந்து விட்டார். யாவே என்னும் உண்மைக் கடவுள் வழிபாட்டை மறந்து தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார் சாலமோன். சிலை வழிபாட்டை ஆதரித்தார். எனவே கடவுள் அவரை தண்டித்தார் என்கிறது விவிலியம். சாலமோனின் இறப்புக்குப் பிறகு அவரது மகன் ரெகோபெயம் ஆட்சி செய்ததாக விவிலியம் கூறுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டு இஸ்ரேல் இரண்டாக உடைந்து சிதறிப்போனது. கடவுள் கட்டளைகளை உதாசீனப்படுத்திய ரெகோபெயம், வேறு கடவுள்களைத் தொழ அரம்பத்தார். இதனால் இஸ்ரேல் மீது வேற்று நாட்டவர்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள்.

அடுத்த  150 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் முழுவதும் வேற்றுநாட்டவர்களுக்கு அடிமையானது. அதாவது கி.மு 705 ஆம் ஆண்டு முதல் யூத சாம்ராஜ்யம் சரிந்து போனது. பின்னர் கி.மு 586-ஆம் ஆண்டு யூத இனத்தைச் சேர்ந்த செதேக்கியா என்னும் மன்னனை பாபிலோன் மன்னன் சிறைப் பிடித்து அவரது இரு மகன்களையும் படுகொலை செய்தான். இந்த வீழ்ச்சி யூத இனம் முழுவதையும் பெருமளவில் பாதித்தது. ஜெருசலேத்தில் இருந்த ஆலயம் இடிக்கப்பட்டு, பொன் பொருள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. யூதர்களின் கலாச்சாரம் நசுக்கப்பட்டது. இதன்பின்னர் யூதர்களின் ஆளுகை அந்நிய மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படடது. ஆனாலும் யூதர்கள் தங்களின் ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க விரும்பி செருபாபேல், எஸ்றா, நெகேமியா போன்ற தலைவர்கள் வேறு சில மன்னர்களின் உதவியைப் பெற்று ஆலயத் திருப்பணியைத் தொடங்கினர். அப்போது யூத மக்கள் தங்கள் கடவுளை வணங்குவதை விட்டு வேறு தவறான பழக்கங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இத்தலைவர்கள் கி.மு. 400 ஆம் ஆண்டுகளில் யூதர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மீண்டும் அவர்களைத் தங்கள் கலாச்சார பாதைக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தினர். இதனிடையே கிரேக்க மன்னர்களின் வழிபாட்டு முறைகளை இஸ்ரேலியர்கள் பின்பற்றுமாறு ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தினர். யூதர்களின் நடைமுறைகள் தவறான பழக்கமாகவும், அதனை கடைபிடிப்பது பெருங் குற்றமாகவும் கருதப்பட்டது.  தங்கள் கலாச்சாரத்தின் அடித்தளத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த யூதர்கள் ஆத்திரமுற்றனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். 

இதனால் கிரேக்கர்கள் தாங்கள் திணிக்க முயன்ற நெருக்கடியைக் குறைத்துக் கொண்டதால், யூதர்கள் மீண்டும் தங்கள் வழிபாட்டு முறைகளைத் தொடர முடிந்தது. ஆனாலும், இது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. காரணம் அடுத்தப்படியாக இவர்கள் ரோமானியர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தனர். அவர்கள் கிரேக்கர்களைவிடவும் மோசமாக நடந்து கொண்டனர். அடக்குமுறைகளைத் தாராளமாக ஏவிவிட்டனர். யூதர்கள் நசுக்கப்பட்டனர். ரோமானியர்களின் ஆட்சித்தான் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. அப்போதுதான் தேவதூதர் இயேசு பிரான் அவதரித்தார்.

யூத மதத்தில் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகளை இயேசு ஏற்கவில்லை. இது யூதர்களுக்குப் பெரும் கோபத்தை வரவழைத்தது. அவரை எதிர்க்கத் தொடங்கினர். மோசஸால் தங்களின் குடியேற்ற பகுதியாக அமைந்த இஸ்ரேல்தான் உலகின் புனிதபூமி என்ற ஆழ்ந்த நம்பிக்கையை யூதர்கள் கொண்டுள்ளனர். அத்துடன் ஜெருசலேம்தான் புனித நகரம் என்றும், அங்குள்ள சாலமன் கோயில்தான் புனிதத்தில் புனிதம் என்றும் நம்புகின்றனர். யூதர்கள்தான் உலகிலேயே புனிதமானவர்கள் என்றும், அவர்களிலும் லேவி என்னும் இனத்தவர்களே மிகுந்த புனிதமானவர்கள் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளனர். அதிலும் பூசாரிகளாக இருப்பவர்களே உயர்ந்தவர்கள் எனவும், அவர்களுள் தலைமை பூசாரியே புனிதத்திலும் புனிதமானவர் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.

விடுமுறை நாட்களை ரொம்பவும் புனிதமான நாட்களாகக் கருதும் யூதர்கள், சபாத் என்னும் தங்களின் முக்கிய விடுமுறை நாள் தான் மிக புனிதமானது என்கின்றனர். உலகிலேயே தங்களின் தாய்மொழியான ஹீப்ரு தான் புனிதமான மொழி என்று சாதிக்கிறார்கள். தோரா தான் உலகின் புனிதமான நூல் என்று அடித்து சொல்லும் யூதர்கள், தங்கள் இறைத்தூதர் அருளிய பத்து கட்டளைகள் மிக புனிதமானது என்றும் கூறுகின்றனர். இப்படித் தங்களை தாங்களே புனிதமானவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் சொல்லிக் கொள்ளும் யூதர்கள், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இனத்தவர்களால் அடித்துத் துரத்தப்பட்டார்கள். அவர்களின் சொந்த பூமியான இஸ்ரேலில் அவர்கள் நிம்மதியாகவே காலங்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது தாய் மண்ணில் இருந்து வெளியேறி எங்கெங்கோ வாழ வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

எனினும் தங்கள் இனத்தின் மீதும் தங்கள் கடவுள் தூதரின் அருள்வாக்கின் மீதும் அபரிமிதமான நம்பிக்கையைக்கொண்ட யூதர்களுக்கு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது இங்கிலாந்து புதுவாழ்வு அளித்தது. மீண்டும் இஸ்ரேல் நாடு அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டை அவர்களுக்கு வழங்கிய பாலஸ்தீனர்கள் பின்னர் நாடோடிகளாக மாற வேண்டிய சூழலை யூதர்கள் ஏற்படுத்திவிட்டனர். இப்போதும் யூதர்களால் இஸ்ரேலில் நிம்மதியான வாழ்வை வாழ முடியவில்லை என்பதே உண்மை.

யூதர்களுக்கும், கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் பல வகையில் ஒற்றுமை இருக்கிறது. யூதர்களின் வேத நூலாக விளங்கும் தோரா, சிறிய மாறுபாடுகளுடன் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளிலும் பழைய ஏற்பாடாக இருந்து வருகிறது. மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இதன் கதைகள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று மதங்களும் ஆதாம்- ஏவாள் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனித பிறவிகள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன. ஈராக் என்று இன்று அழைக்கப்படும் மெசபடோமியாவில் இருந்து புறப்பட்ட ஆபிரகாம், கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீனப் பகுதிக்கு சென்று வசிக்கத் தொடங்கியதை இம்மூன்று மதங்களுமே ஒப்புக் கொள்கின்றன.

மூன்று மதங்களின் புனித தலமாக இன்றும் விளங்கி வருகிறது ஜோர்டான் நாட்டிலுள்ள மெக்பெலா (Machpelahz)  என்னும் குகை, ஹெப்ரான் என்னும் இடத்தில் உள்ள இக்குகையில் தான் முதன் முதலாகத் தோன்றியதாக நம்பப்படும் ஆதாம், ஏவாள் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதே குகையில்தான் சாராவும், பின்னர் ஆபிரகாமும் புதைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. நோவா, ஆபிரகாம், மோசஸ் உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் உதித்து, கடைசியாகத் தோன்றிய தீர்க்கதரிசிதான் இயேசு கிறிஸ்து இயேசுவிற்கு முன்னர் தோன்றிய தீர்க்கதரிசிகள் யாரும் தனியாக மதம் எதனையும் நிறுவவில்லை.

எனவே, யூத மதம் மட்டுமே தனி ராஜ்யம் நடத்தி வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் கிரேக்க, ரோமானியர்களின் மத வழிபாடுகளும், அரேபியாவின் சிறு தெய்வ வழிபாடுகளும் இருந்த போதிலும் ஒழங்காக வடிவமைக்கப்பட்டு, ஒரே கடவுள் என்னும் உருவ வழிபாடற்ற மதமாக இருந்தது யூத மதம் மட்டுமே. யூதர்களின் புனித நூலான தோரா (Torah) எழுதப்பட்டது அவர்களின் தாய் மொழியான ஹீப்ரு மொழியில் தான் இம்மொழியை எபிரேயு என்கிறது பைபிள். இருப்பினும் இம்மொழி முக்கிய இடத்தை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் யூதர்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளையே பயன்படுத்தி வந்தனர். எனவே, காலப் போக்கில் ஹீப்ரு மொழி இறந்துபட தொடங்கியது.

19ஆம்  நூற்றாண்டின் இறுதிகளில்தான் யூதர்கள் தங்கள் ஹீப்ரு மொழியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். தங்களுக்கு என்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள ஒரு மொழி அவசியம் என்பதை உணர்ந்த பின்னரே ஹீப்ருவைத் தோண்டி எடுத்தார்கள். ஹீப்ரு மொழியை பள்ளிகளில் போதனா மொழியாக அறிவித்தார்கள். 1913ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இம்மொழியின் தாக்கம் அதிகமாகியது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதும், ஹீப்ருவை தேசிய மொழியாக அங்கீகரித்தார்கள்.

தற்போது யூதர்கள் வசிக்கும் இஸ்ரேலில் ஹீப்ரு மொழி ஆட்சி மொழியாக உள்ளது. பழைய கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இன்றும் பின்பற்றி வருகிறார்கள். விவசாயம், தொழில் நுட்பம், போர்த் தந்திரம் போன்றவற்றில் இன்று யூதர்கள் உலகிலேயே மிகச்சிறந்தவர்களாகத் திகழ்ந்து வருகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக யூதர்களை விரோதிகளாக நினைத்து, அந்த இனத்தையே அழித்து வந்த மேற்கத்திய நாடுகள் இன்று இஸ்ரேலின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர்களாக மாறியுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் யூதர்கள் 0.25 சதவீதம் என்ற அளவில் மிகச் சிறுபான்மையினராகத்தான் இப்போது உள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் யூதர்கள். ஆனால் உலகின் மிகச்சிறந்த விருதாக விளங்கும் நோபால் பரிசைப் பெற்ற யூதர்கள் 27 சதவீதம் பேர். யூதர்களில் 42 சதவீதம் பேர் இஸ்ரேலில் வசிக்கின்றனர். மேலும் 42 சதவீதம் பேர் அமெரிக்காவிலும், மீதமுள்ளவர் ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளிலும் வசிக்கின்றனர். செஸ் என்னும் அறிவுத்திறன் வாய்ந்த விளையாட்டில் உலகில் பாதிக்குப் பாதிப்பேர் யூதர்கள்தான்.

இந்தியாவில் யூதர்கள்

இந்தியாவிலும் யூதர்கள் வசித்து வருகிறார்கள். மும்பை, புணே, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் இவர்கள் இஸ்ரேலின் மைந்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 2 ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு அலிபாக் என்னும் கடற்கரையில் ஏழு கப்பல்களில் இவர்கள் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. இவர்களின் வழக்கு மொழியாக மராத்தி இருக்கிறது. கேரளாவின் மலபார் பகுதிகளிலும் இவர்கள் வசித்து வருகிறார்கள். கொச்சின் யூதர்கள் என்னும் இவர்கள் பெரும்பாலும் கறுப்பு நிறந்தவர்களாக இருப்பதால் கறுப்பு யூதர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மன்னர் சாலமோன் காலத்தில் இவர்கள் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.

ஐரோப்பாவின் ஸ்பெயின், ஹாலந்து போன்ற நாடுகளில் இருந்து கோவாவிற்கு புலம்பெயர்ந்து வந்த இவர்கள் வெள்ளை யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கொல்கத்தாவிலும் இவர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வரும் யூதர்களின் சமூகத்தில் பெண்கள் சார்ந்த சடங்குகள் விநோதமாக இருந்து வருகிறது.

யூதப் பெண்கள்

மாதவிடாய் முடிந்த பின்னர் குளிப்பதற்காகப் பெண்களுக்குத் தனிக் குளியல் அறைகள் உள்ளன. மத சம்பிரதாயப்படி ஒரு தொட்டியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு யூத முறைப்படி குளியல் நடைபெறுகிறது. சம்பிரதாயப்படி அவர்கள் குளிப்பதை உறுதி செய்வதைக் கவனிப்பதற்காக தனியாக ஒரு பெண் நியமிக்கப்படும் முறையும் உண்டு. குளிப்பதற்கு முன்பு அழுக்குப்படிந்த நகங்கள் வெட்டப்படுகின்றன. அழுக்குப்படிந்த கேசங்களுகம் மழிக்கப்படுகின்றன. இதை மிக்விக் என்றும் டகாரா என்றும் கூறுகின்றனர். மிக்விக் என்றால் நீர் சேகரித்தல் என்றும், டகாரா என்றால் புனிதச் சடங்கு என்றும் பொருள்.

மாதவிடாய் காலங்களில் கணவனைத் தொடுவதோ ஒரே படுக்கையில் படுத்து உறங்குவதோ மறுக்கப்படுகிறது. நம் கிராமங்களில் இந்த வழக்கம் இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரசவத்திற்கு பிறகு பெண் உடல் தீட்டாகக் கருதப்படுகிறது. புனித நீராட்டல் முடிந்தப் பிறகே அவள் தூய்மை அடைகிறாள். திருமணமான பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இது சற்று மாறி, தங்கள் தலைமுடியை மறைப்பதற்காக பொய் முடி (விக்) வைத்துக் கொண்டார்கள். அதாவது யூத குலப் பெண்கள் தங்கள் தலைமுடியை மற்றவர்கள் மட்டுமல்லாமல் தங்கள் கணவன் பார்ப்பதற்குக்கூட அனுமதிப்பது கிடையாது.

திருமணமான பெண்கள் ஒருவகையான தொப்பி, ஸ்கார்ப் போன்றவற்றால் தங்கள் தலையை மறைத்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. யூதர்கள் தங்கள் கோயிலில் பெட்டி ஒன்றை வைத்து கும்பிட்டனர். அதனுள் எகிப்தில் இருந்து வெளியேறும்போது  யூத மக்களுக்கு அவர்களின் கடவுள் யாவே அளித்த ஒப்பந்தம் கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கோயிலின் மேற்குச் சுவர் மட்டுமே எஞ்சி இருப்பதால் அதையே யூதர்கள் வணங்கி வருகின்றனர்.  பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளை அக்கோயிலின் சுவர் புறமாக நின்று கொண்டு படிப்பதுதான் அவர்களின் தற்போதைய வழிபாட்டு முறையாக உள்ளது.

புரோட்டஸ்ண்ட் பிரிவினர் மதிக்கும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டையே யூதர்கள் மதித்துப் போற்றி வருகின்றனர். இஸ்லாமியர்களின் ஒரே கடவுள் கொள்கையை அப்போதே யூதர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தொழுகை செய்வதிலும் இஸ்லாமியர்கள் யூதர்களை ஒத்தே இருக்கின்றனர். கீழே அமர்ந்து நமஸ்கரிக்கிறார்கள். அஸ்லாம் அலைக்கும் என்பது இஸ்லாமியர்களின் வாழ்த்து மொழி. அதை ஹீப்ருவில் மொழி பெயர்த்தால் சாலோம் அலைக்கும் என்று வருகிறது. இப்போதும் யூதர்கள் சாலோம் அலைக்கும் என்றே ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது கூறிக் கொள்கிறார்கள்.

தொடரும்...

- C.P.சரவணன், வழக்கறிஞர் - 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com