இன அரசியல்-19: கம்போடிய, ருவாண்டா  இனப்படுகொலை

இன அரசியல்-19: கம்போடிய, ருவாண்டா  இனப்படுகொலை

கம்போடியா இனப்படுகொலை (Cambodian genocide)
 

பொல்பொட்

பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர்.

கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல விடயங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமானது. பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த உறுப்பினர்கள், ஐநாவின் அனுசரணை தீர்ப்பாயத்துக்கு முன்னால் நின்றார்கள். 

7, ஆகஸ்டு, 2014-இல் இறுதிவிசாரணை நடந்துமுடிந்த அதேநாளில் நீதிபதி நீல்நௌன் என்பவரால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அதில், போர் குற்றவாளிகளாக அறியப்பட்ட நௌவான்சியா, கெகியூசம்பான்  ஆகியோர் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலை நடத்தி மனிதாபிமானமின்றி கொன்று குவித்துள்ளனர் எனவே அவர்கள் ஆயுள்வரை சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டு கால கெமரூஜ் ஆட்சியில் புரியப்பட்ட கொடுமைகளுக்காக இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இப்போது இவர்கள் மீது நீதி விசாரணை வந்திருக்கிறது.

இந்த வழக்கில் நாலாயிரம் பேர் சிவில் தரப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட இவர்களின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்டுள்ளன.


ருவாண்டா இனப்படுகொலை (Rwandan genocide)

பின்னணி

ருவாண்டாவின் அப்போதைய ஜனத்தொகையில் 85% சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக வாழ்ந்துவந்த துத்ஸி இனத்தாரின் கை மேலோங்கியிருந்தது. 1959ல் ருவாண்டாவின் துத்ஸி மன்னராட்சி முறையை ஒழித்துவிட்டு ஹூட்டூக்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். துத்ஸி இனத்தார் யுகாண்டாவுக்கும் பிற அண்டை நாடுகளுக்கும் வெளியேறினர்.

அவர்கள் ஆர் பி எஃப் அதாவது ருவாண்டா தேசப்பற்று முன்னணி என்ற கிளர்ச்சிக் குழு ஒன்றை அமைத்து ருவாண்டாவுடன் சண்டையிட்டு வந்தனர். 1990ல் அந்நாட்டின் மீது படையெடுத்தனர். 1993ல் ருவாண்டாவுக்கும் இவர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டிருந்தது.

படுகொலை

1994 ஏப்ரல் 6ஆம் தேதி ருவாண்டாவின் அதிபரான ஹூட்டூ இனத்தைச் சேர்ந்த ஹப்யாரிமனா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட ஹூட்டூ கடும்போக்காளர்கள், துத்ஸி இனத்தாரை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு கொலைவெறியாட்டத்தில் இறங்கினர்.

ருவாண்டா அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் யார் யார் என்று கவனமாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் எல்லாம் திட்டமிட்டு குடும்பத்தோடு கொன்று குவிக்கப்பட்டனர். துத்ஸி இனத்தவரை அவரது அண்டை வீட்டில் வாழ்ந்த ஹூட்டூ இனத்தவரே கொன்ற அவலமும், துத்ஸி மனைவியை அவருடைய ஹூட்டூ கணவனே கொன்றது போன்ற கொடூரங்களும் அப்போது அரங்கேறின.

கொலைகளைத் தாண்டி துத்ஸி இனப் பெண்கள் ஆயிரக்கணக்கானோர், பிடித்துச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர்.அந்த நேரத்தில் ஐநா அமைதிகாப்பு படைகளும் மற்றும் பெல்ஜியம் படைகளும் அவ்விடத்தில் இருந்தாலும், இந்த கொலைகளை தடுக்க வேண்டிய உத்தரவு அவர்களுக்கு சென்றிருக்கவில்லை.

ஹூட்டூ அரசாங்கத்துக்கு நெருக்கமாக இருந்த பிரஞ்சு அரசாங்கம் பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்தாலும் அதுவும் கொலைகளைத் தடுக்க போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸும் கூட கொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக ருவாண்டாவின் அப்போதைய அதிபர் குற்றம்சாட்டுகிறார். ஆனால் பிரான்ஸ் அதனை மறுக்கிறது.

பின்னர் துத்ஸி இன கிளர்ச்சிக் குழுவினர் வலுவாக அணிதிரண்டு ஹூட்டுக்களை ருவாண்டாவை விரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர். ஹூட்டூக்கள் ஆயிரக்கணக்கானோரை அப்போது துத்ஸி கிளர்ச்சிக்காரர்கள் கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

கொலை வெறியாட்டம் முடிந்து அமைதி திரும்பிய பின்னர் ருவாண்டாவில் ஆர் பி எஃப் கிளர்ச்சிப் படையின் தலைவர் பால் கிகாமே அதிபராக வந்து, பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றியுள்ளார். வறுமையின் பிடியிலிருந்து இந்த குட்டி நாடு வேகமாக வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ருவாண்டாவின் பொருளாதாரம் சராசரியாக ஒன்பது புள்ளிகள் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிகரான ஒரு வளர்ச்சி ஆகும்.

இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கை என்று எடுத்துக்கொண்டால், இருபது லட்சம் பேருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்களிலும், கொலைவெறிக் கும்பல்களின் தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மீது அண்டையிலுள்ள தான்ஸானியாவிலும் வழக்கு விசாரணை நடந்துள்ளது. ருவாண்டாவில் தற்போது எவருமே இனம் பற்றி பேச சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com