உங்களுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. சந்திரபகவான்ஆறாம் வீட்டில் நீச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் சந்திரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. பொதுவாக, சந்திர மஹா தசையும் ஏழரைநாட்டு சனியும் ஒரே நேரத்தில் நடந்தால் வாழ்க்கையில் குழப்பங்களும் சஞ்சலங்களும் உண்டாகும் என்பது விதி. இவ்வாறு நடக்கையில் சனிபகவான் எந்த அளவுக்கு சுப பலம் பெற்றிருக்கிறாரோஅந்த அளவுக்கு குறைகள் குறையும் என்று புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு சனிபகவான் அஷ்டம மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாகி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் குருபகவானையும் பார்வை செய்கிறார். முழு சுபரான குருபகவானும் சனிபகவானை பார்வை செய்கிறார். அதனால் உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படாது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடிவரும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் வம்சம் விருத்தியடையும். இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். தொடரும் செவ்வாய்பகவானின் தசையில் பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்.