இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் விற்பனை இருக்காது என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: எரிபொருள் இறக்குமதி மற்றும் வாகனங்களின் நடைமுறை செலவினங்களைக் குறைப்பதை மத்திய அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கேற்ப திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மிகப் பெரிய அளவில் அறிமுகப்படுத்த உறுதி பூண்டுள்ளோம். மின்சார வாகனங்கள் உருவாக்கத்தில் தன்னிறைவு காண்பதே எங்களின் இலக்கு. இதன் காரணமாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் வாகனங்கள் ஒன்று கூட இந்தியாவில் விற்பனையாகாது.
மின்சார வாகனத் தயாரிப்பு துறை ஸ்திரத் தன்மை பெற ஆரம்பத்தில் 2-3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும். மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது 30 சதவீத லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தொடக்க செயல்பாடுகளுக்கு மத்திய அரசு மிகவும் உதவியாக இருந்ததன் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.
மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய கனரகத் தொழில்துறை மற்றும் நீதி ஆயோக் கொள்கைகளை வகுத்து வருகிறது என்றார் அவர்.