மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த உள்நாட்டு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திராவின் முதல் காலாண்டு லாபம் 19.79 சதவீதம் சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் மோட்டார் வாகனத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்புதிய வரி அமலாக்கத்தால் வாகனங்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர்கள் வாகனம் வாங்கும் திட்டத்தை ஒத்திப் போட்டனர். அதன் விளைவு முதல் காலாண்டு விற்பனையில் பிரதிபலித்துள்ளது.
நடப்பு 2017-18 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை 1,12,293 ஆக இருந்தது. குறிப்பாக, வர்த்தக வாகனங்களின் விற்பனை கணிசமாக குறைந்தது. இதையடுத்து வருவாய், ரூ.12,335.56 கோடியாக காணப்பட்டது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான ரூ.11,942.9 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 3.29 சதவீதம் மட்டுமே அதிகம்.
அதேசமயம், தனிப்பட்ட நிக ர லாபம் ரூ.954.95 கோடியிலிருந்து 19.79 சதவீதம் சரிவடைந்து ரூ.765.96 கோடியாக இருந்தது.
பருவமழைப் பொழிவு நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டின் காரணமாக ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் டிராக்டர்கள் விற்பனை சிறப்பாக இருந்தது.
முதல் காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு டிராக்டர் துறையின் விற்பனை வளர்ச்சி 8.5 சதவீதமாக இருந்த நிலையில், மஹிந்திரா டிராக்டர் விற்பனை 13.2 சதவீத வளர்ச்சியை எட்டியது என அந்த அறிக்கையில் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.