டெய்ம்லர் இந்தியா நடப்பு நிதி ஆண்டில் 9 டன்னுக்கும் குறைவான பிரிவில் புதிய சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெய்ம்லர் டிரக்ஸ் ஆசியா தலைவர் மார்க் லிஸ்டோசெல்லா கூறியதாவது: நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாத காலத்துக்குள் 9 டன்னுக்கும் குறைவான பிரிவில் புதிய சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த வகை லாரிகளை சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் தயாரிக்க உள்ளோம்.
ரூ.5,000 கோடி முதலீட்டில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஒரகடம் ஆலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 50,000 வாகன உற்பத்தி என்னும் சாதனையை எட்டினோம். முதல்கட்டமாக 9 டன்னுக்கும் குறைவான இந்த வகை லாரிகளை "பியூசோ' பிராண்டில் ஏற்றுமதி செய்ய மட்டுமே திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் புதிய அறிமுகத்தால் நடப்பு ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
தற்போதைய நிலையில் டெய்ம்லர் நிறுவனத்தின் வாகனங்களை 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றார் அவர்.