இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வர்த்தக வாகனங்களின் விலையை 8.2% வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (வர்த்தக வாகனப் பிரிவு) கிரீஷ் வாக் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சரக்குப் போக்குவரத்துக்கான வர்த்தக வாகனங்களின் விலை 0.3 % சதவீதம் முதல் 4.21% வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பயணிகள் போக்குவரத்துக்கான வர்த்தக வாகனங்களின் விலை மாடல்களுக்கு ஏற்ப 0.6% முதல் 8.2% வரையில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கொண்டு சேர்க்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
வாகனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதையடுத்து வாடிக்கையாளர்களின் செலவினம் வெகுவாக குறையும் என்பதுடன் வர்த்தக வாகனங்களுக்கான தேவையும் அதிகரிக்கும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல பலனை அளிக்கும். தொழிலில் ஈடுபட்டோர் அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்பதுடன் எளிதாக
வர்த்தகம் செய்யவும் அது உதவும் என்றார் அவர்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக பயணிகள் கார் விலையை ரூ.2.17 லட்சம் வரையில் குறைப்பதாக டாடா மோட்டார்ஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.