ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், புதிய இலகு ரக வர்த்தக வாகனங்களை உருவாக்கும் பணிகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.400 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் (இலகு ரக வர்த்தக வாகனம்) நிதின் சேத் தெரிவித்ததாவது:
அசோக் லேலண்ட் நிறுவனம் உள்நாட்டு சந்தையை மட்டும் குறி வைக்காமல் வெளிநாட்டு சந்தைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
அந்த வகையில், இரண்டு புதிய வழிமுறைகளில் இலகு ரக வர்த்தக வாகனங்களைத் தயாரித்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வெவ்வேறு அளவிலான என்ஜின் சக்தி கொண்ட இடது மற்றும் வலது புற ஸ்டியரிங் அமைப்பைக் கொண்ட பல மாடல்களை உருவாக்கவுள்ளோம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலகு ரக வர்த்தக வாகனங்களின் மேம்பாட்டிற்காக ரூ.400 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம்.
வரும் 2019-20-ஆம் நிதி ஆண்டுக்குள் வர்த்தகப் பிரிவிலான வாகனங்கள் விற்பனை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது.
அதன்படி, தற்போது 35,000-36,000 என்ற அளவில் உள்ள வர்த்தக வாகனங்களின் விற்பனையை 1 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டிய நாடுகள் சார்க், ஜிசிசி (வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில்), ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியான் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப இலக்குகளை நிர்ணயித்து அவற்றுக்கான வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.
தற்போதைய நிலையில் மொத்த விற்பனையில் வெளிநாடுகளின் சந்தைப் பங்களிப்பு 10-12 சதவீத அளவே உள்ளது. இதனை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரையில், தோஸ்த், மித்ர, பார்ட்னர் ஆகிய வர்த்தக வாகனங்களின் விற்பனை சிறப்பாகவே உள்ளது.
தற்போதைய நிலையில், சர்வதேச அளவில் 370 ஆக உள்ள விற்பனை மையங்களின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 450-ஆக அதிகரிக்கவுள்ளோம்.
குறிப்பாக, உள்நாட்டில் இந்த எண்ணிக்கையை 113-லிருந்து 150-ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.