பயணிகள் கார் விற்பனை உள்நாட்டு சந்தையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் 14.68 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைமை இயக்குநர் சுகதோ சென் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: 2017-18 புதிய நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரலில் பயணிகள் வாகன விற்பனை 14.68 சதவீதம் என்ற அளவில் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளதற்கு புதிய உற்பத்தி ஆலைகள், பிஎஸ்-4 நவீன தொழில்நுட்பத்தில் புதிய மாடல்கள் அறிமுகம் உள்ளிட்டவையே முக்கிய காரணம். சென்ற ஏப்ரலில் 2,77,602 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 2,42,060-ஆக காணப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக உள்நாட்டு கார் விற்பனை 17.36 சதவீதம் வளர்ச்சியடைந்து 1,90,788-ஆக இருந்தது. இதற்கு முன்பாக 2015-ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் கார் விற்பனை 21.8 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை 23.10 சதவீதம் அதிகரித்து 1,44,081-ஆக இருந்தது. கார் விற்பனையில் இந்த நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இருசக்கர வாகனப் பிரிவில் விற்பனை 7.34 சதவீதம் அதிகரித்து 16,74,796-ஆக காணப்பட்டது. குறிப்பாக, கிராமப்புறங்களில் ஸ்கூட்டர்களுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்தது. இதையடுத்து, ஏப்ரலில் அவற்றின் விற்பனை 4,68,550 என்ற எண்ணிக்கையிலிருந்து வளர்ச்சி கண்டு 5,86,886-ஆக காணப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 10,24,895-லிருந்து அதிகரித்து 10,29,972-ஆக இருந்தது.
அதேசமயம் வர்த்தக வாகனங்கள் விற்பனை 22.93 சதவீதம் சரிந்து 41,490-ஆக காணப்பட்டது. 2009 ஜனவரி மாதத்தில் வர்த்தக வாகனங்கள் விற்பனை அதிகபட்சமாக 67 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு, சென்ற ஏப்ரலில்தான் இப்பிரிவிலான வாகன விற்பனை இந்த அளவுக்கு சுணக்கமடைந்தது.
மொத்த வாகன விற்பனை 19,00,848-லிருந்து 6.82 சதவீதம் அதிகரித்து 20,30,476-ஆக காணப்பட்டது என்றார் அவர்.