ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநருக்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்க திட்டம்
ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநர் அஜய் சிங்குக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட், நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் சிங் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். மேலும், நிறுவனத்தை லாப பாதைக்கு திருப்பும் வரை சம்பளம் பெறப் போவதில்லை என்று அப்போதே சபதம் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முன் எப்போதும் இல்லாத அளவில் ரூ.59 கோடி லாபம் ஈட்டியது. மேலும், அந்த நிறுவனம் தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக லாபத்தைப் பதிவு செய்து வருகிறது.
அதையடுத்து, அஜய் சிங்குக்கு மாதம் ரூ.50 லட்சம் சம்பளம், பிற ஊக்கத் தொகைகள் உள்பட ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை வழங்க ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது. லாபத்தில் இரண்டு சதவீத தொகையை பெறவும் அஜய் சிங் தகுதியுள்ளவராகிறார்.
இதற்கான திட்ட அறிக்கையை வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.
இந்த சம்பள விகிதம் நடப்பு ஆண்டு ஏப்ரல் 1 முதல், 2018-ஆம் ஆண்டு மே வரையில் பொருந்தும்.