அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் '249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் ' திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும், அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகள் வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு '249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் ' திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி தினசரி 10 ஜிபி டேட்டா 2 எம்பிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு கிடைக்கும். இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நீங்கள் எந்த நெட்வார்க்கிற்கு எவ்வளவு நேரம் பேசினாலும் இலவசம் தான். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
249 ரூபாய் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ஒரு மாதத்திற்கு 300 ஜிபி டேட்டா என்ற அதிரடி அறிவிப்பை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. இதற்கு புதிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு வாங்கவேண்டும்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை பெற 1800 345 1500. என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். வயர்லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் இந்த அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.