ஜி.எஸ்.டி.: நலிந்துவரும் குடிசை தீப்பெட்டித் தொழில்

மூலப் பொருள்கள் மீதான விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த குடிசை தீப்பெட்டித் தொழில்
ஜி.எஸ்.டி.: நலிந்துவரும் குடிசை தீப்பெட்டித் தொழில்

மூலப் பொருள்கள் மீதான விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த குடிசை தீப்பெட்டித் தொழில் இன்று ஜிஎஸ்டி வரி விதிப்பால் மேலும் நசிந்துள்ளது.
மாடி வீடு முதல் குடிசையில் வசிப்பவர் வரை எல்லாத் தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சில பொருள்களில் தீப்பெட்டியும் ஒன்று. நவீன லைட்டர்கள் வந்த போதிலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறையவில்லை. நாட்டின் தீப்பெட்டித் தேவையை 50 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்வது தமிழகம் தான். தமிழகத்தில் முதலாவதாக 1923-ல் சிவகாசியில் தான் தீப்பெட்டித் தொழில் அறிமுகமானது. அதற்கடுத்த சில மாதங்களில் இத்தொழில் குடியாத்தத்தில் தொடங்கப்பட்டது.
மாநிலத்தில் குடிசைத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் கையினால் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. தமிழகத்தில் சிவகாசிக்கு அடுத்தபடியாக இத்தொழில் இங்கு சிறப்பாக நடைபெற்று வந்தது. 600 க்கும் மேற்பட்ட குடிசைத் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இங்கு இயங்கி வந்தன. அபாயகரமான தொழில் பட்டியலில் தீப்பெட்டித் தயாரிப்பு இருந்தாலும், விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் இத்தொழிலைப் பாதுகாப்பாக செய்யலாம்.
குடிசைத் தீப்பெட்டித் தொழிலைத் தொடங்க சுமார் 1200 சதுர அடி கட்டடமும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடும் போதுமானது. இதனால் குறைந்தபட்சம் 20 பேருக்கு வேலை கொடுக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக குச்சி, மெழுகு, கந்தகம், குளோரைட் போன்ற மூலப் பொருள்கள் மீதான விலை உயர்வால் இத்தொழில் நசியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தின் தாக்கத்தால் ஆள்பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால் மேலும் நசிவை சந்தித்தது. இதனால் குடிசைத் தீப்பெட்டித் தொழில் கேள்விக் குறியானது.
இந்நிலையில் பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தி தொடங்கப்பட்டது. பகுதி இயந்திர உற்பத்தியைத் தொடங்க வேண்டுமானால் சுமார் ரூ. 1.50 கோடி வரை முதலீடு தேவைப்படும். இந்த நிலையில் நசிந்து வரும் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து பொது பயன்பாட்டு மையம் (கன்சார்டியம்) அமைத்து போதிய இடமும், கட்டட வசதியும் செய்து தந்தால் அவர்களுக்கு இயந்திரங்களை இறக்குமதி செய்து தர மத்திய, மாநில அரசுகள் முன் வந்தன. இதற்கு மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 10 சதவீதமும் மானியம் அளிக்க முன் வந்தன.
மத்திய அரசின் முடிவையறிந்த குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் விடாமுயற்சி மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் 2010-ல் தமிழ் நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே முதலாவதாக குடியாத்தத்தில் கன்சார்டியம் அமைக்கப்பட்டது. இதில் குடிசைத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 25 பேர் அங்கத்தினர்களாக ஆயினர். குடியாத்தத்தில் தொடங்கப்பட்ட பிறகுதான் சாத்தூர், விருதுநகர், கழுகுமலை, கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களில் கன்சார்டியங்கள் தொடங்கப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்தின் ஒரு பகுதியில் குச்சிகளைக் கொட்டினால், அதுவே குச்சிகளை பாலிஷ் செய்து, அதில் மெழுகு பதித்து, மருந்து தோய்த்த தீக்குச்சிகளை வெளியே தள்ளும்.
கன்சார்டியத்தில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள், தங்கள் தேவைக்கேற்ப தீக்குச்சிகளை எடுத்துச் சென்று பெட்டிகளில் அடைத்து தங்கள் நிறுவன லேபிள்களை ஒட்டி விற்பனைக்கு அனுப்புவர். கன்சார்டியத்தில் அங்கத்தினர்களாக இல்லாவிட்டாலும், தீப்பெட்டித் தொழிற்சாலை நடத்த உரிமம் பெற்றவர்கள், கட்டணம் செலுத்தி மருந்து தோய்த்த தீக்குச்சிகளை வாங்கிச் சென்று பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்து வந்தனர்.
இடையே, பல்வேறு காரணங்களால் நசிவைச் சந்தித்த குடிசைத் தீப்பெட்டித் தொழில், கன்சார்டியத்தின் வரவால் புத்துயிர் பெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பில் இதுவரை வரியே இல்லாத குடிசைத் தீப்பெட்டித் தொழிலுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு இயந்திர உற்பத்தி தீப்பெட்டித் தொழிலுக்கு இதுவரை விதித்திருந்த 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது. 12 சதவீதமாக இருந்த பகுதி இயந்திர உற்பத்தி தீப்பெட்டித் தொழிலுக்கு 18 சதவீத வரி போடப்பட்டுள்ளது.
மேலும், தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்களான, குச்சி மீது இதுவரை இல்லாமல் இப்போது வரி போடப்பட்டுள்ளது. மெழுகு மீதான 8 சதவீத வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கந்தகம், குளோரைட் மீதான வரியும் உயர்ந்துள்ளது. தீப்பெட்டித் தயாரிக்க பயன்படுத்தப்படும் அட்டை மீது 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலில் இடையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
முழு இயந்திர உற்பத்தி தீப்பெட்டிக்கான வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் அவர்கள் அதிக அளவில் தீப்பெட்டிகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புவர். இதனால் குடிசைத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அவர்களோடு போட்டி போட முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் குடிசைத் தீப்பெட்டித் தொழிலுக்கு விதித்துள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வலியுறுத்தி ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கதவடைப்பு போராட்டம் தொடங்கினர். மேலும், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதற்கான பயன் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழகத்தில் குடிசைத் தீப்பெட்டித் தொழில் கேள்விக்குறியாகியுள்ளது. இத் தொழிலைக் காப்பாற்ற வேண்டுமானால் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து இத்தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வி.ஜி. தனபால் கூறியது. குடிசைத் தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கன்சார்டியம் அமைத்துத் தந்ததை பாராட்டுகிறோம். மூலப் பொருள்கள் மீதான விலை, வரி, உயர்வு, ஆள் பற்றாக்குறை, கூலி பற்றாக்குறை போன்ற காரணங்களால் இத்தொழில் பெரிதும் நசிந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. குடிசை தீப்பெட்டித் தொழிலுக்கு விதித்துள்ள 5 சதவீத வரியை மத்திய அரசு அறவே நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com