பங்குச் சந்தைகளுக்கு லாபகரமான வாரம்

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளுக்கு லாபகரமானதாக இருந்தது.
பங்குச் சந்தைகளுக்கு லாபகரமான வாரம்

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளுக்கு லாபகரமானதாக இருந்தது.

அமெரிக்கா-வடகொரியா இடையிலான போர் பதற்றம் ஓரளவுக்கு தணிந்தது மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதில் நிதான முடிவெடுக்கும் என்ற நிலைப்பாடு ஆகியவை உலக முதலீட்டாளர்களிடையே சாதகமான சூழலை உருவாக்கின.
பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்ததை சாதகமாகப் பயன்படுத்தி உள்நாட்டு நிதி நிறுவனங்கள் அவற்றில் முதலீடு மேற்கொண்டதும் சந்தை ஏற்றத்துக்கு மேலும் வழிவகுத்தது.
கடந்த வாரத்தில் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ரூ.4,369.26 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதேசமயம், அந்நிய நிறுவனங்கள் ரூ.7,157.16 கோடி மதிப்பிலான இந்திய நிறுவனப் பங்குகளை விற்றுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி விகிதத்தில் மத்திய அரசின் மறுபரிசீலனை காரணமாக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது.
மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாமிடத்தில் உள்ள இன்ஃபோசிஸ், பங்குகளை திரும்பப்பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்ததும் பங்கு சந்தை விறுவிறுப்புக்கு கூடுதல் வலு சேர்த்தது.
அதேசமயம், இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விஷால் சிக்கா திடீரென பதவி விலகியது; பார்சிலோனாவில் பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் வார இறுதியில் பங்குச் சந்தையின் ஏற்றத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தன.
கடந்த வாரத்தில் ரியல் எஸ்ட்டேட் துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 6.60 சதவீதம் அதிகரித்தது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை நிறுவனப் பங்குகளின் விலை 3.73 சதவீதமும், மின்சாரம் 3.36 சதவீதமும், நுகர்வோர்சாதனங்கள் 3.29 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 2.94 சதவீதமும், மோட்டார் வாகனத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 2.14 சதவீதமும் அதிகரித்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 4.91 சதவீதமும், சிப்லா 4.24 சதவீதமும், எச்யுஎல் 4.17 சதவீதமும், ஸன் பார்மா 4.14 சதவீதமும் உயர்ந்தன.
அதனைத் தொடர்ந்து, ஹீரோ மோட்டோகார்ப் 3.94 சதவீதமும், ஐடிசி 3.77 சதவீதமும், கோல் இந்தியா 3.16 சதவீதமும், என்டிபிசி 2.51 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.27 சதவீதமும், மாருதி 2.24 சதவீதமும், பவர் கிரிட் 2.17 சதவீதமும், ஹெச்டிஎப்சி 2.12 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.07 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 1.87 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், நிறுவனத்தின் உள்விவகாரங்களால் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 6.55 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் லேப் பங்குகளின் விலை 1.41 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில் 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 311 புள்ளிகள் அதிகரித்து 31,524 புள்ளிகளாக நிலைத்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.14,632.13 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 126 புள்ளிகள்அதிகரித்து 9,837 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,03,308.46 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com