சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த கிரியேட்டிவ் சைக்கிள்ஸ், கிரேட் சைக்கிள்ஸ் என்கிற இரு நிறுவனங்களைக் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் (டிஐ சைக்கிள்ஸ் இந்தியா இதில் ஒரு பிரிவு) நிர்வாக இயக்குநர் எல்.ராம்குமார் தெரிவித்ததாவது:
கொழும்பில் தயாரிப்பு ஆலை அமைத்து இயங்கி வரும் கிரியேட்டிவ் சைக்கிள்ஸ் மற்றும் கிரேட் சைக்கிள்ஸ் நிறுவனங்களை கையகப்படுத்தும் இறுதி உடன்படிக்கையில் டிஐ சைக்கிள்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனங்கள், குழந்தைகளுக்கான சைக்கிள்கள் மற்றும் அலாய் பைக்குகளுக்கான உருக்கு சக்கரங்களை தயாரித்து வருகின்றன.
எனவே, இந்தக் கையகப்படுத்துதல் மூலம் பிரீமியம் சைக்கிள் சந்தையில் டிஐ நிறுவனத்தின் பங்களிப்பு மேலும் உயரும்.
மேலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலக தரத்திலான சைக்கிள் தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற இலக்குக்கு இது வலு சேர்க்கும் என்றார் அவர்.
இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை, உரிய அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பிறகு, நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.