இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) விகிதம் சென்ற அக்டோபரில் 3 மாதங்களில் காணப்படாத அளவுக்கு 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஐஐபி விகிதம் 4.2 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 4.14 சதவீதமாகவும் காணப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் முடங்கியதையடுத்தும், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி பின்னடைவைக் கண்டதுமே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு 2017-18ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத கால அளவில் இந்திய தொழிலக உற்பத்தி வெறும் 2.5 சதவீத அளவுக்கே அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது 5.5 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.