அடுத்த மாதம் முதல் 4ஜி இணையதள சேவையை வழங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் தொடங்கி, அந்தச் சேவையை படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்த, அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
எங்களது 4ஜி சேவையை நாங்கள் கேரள மாநிலத்தில் முதல் முறையாகத் தொடங்கவிருக்கிறோம். ஏற்கெனவே நாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவை வேகம் குறைவக உள்ள பகுதிகளை மட்டும் முதலில் தேர்ந்தெடுத்து, அங்கு 4ஜி சேவையாக தரமேற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
கேரளத்துக்கு அடுத்தபடியாக, எங்களுக்கு அதிக வருவாய் அளித்து வரும் ஒடிஸா தொலைத் தொடர்பு சரகத்தில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்.
ஆரம்பக்கட்ட 4ஜி அறிமுங்களுக்கு, தற்போது எங்களிடம் உள்ள 2,100 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடே போதுமானது ஆகும். எனினும், நாடு முழுவதும் அந்தச் சேவையை அறிமுகப்படுத்த, அரசிடம் கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு கோரியுள்ளோம் என்றார் அவர்.
மும்பை மற்றும் தில்லி சரகங்களைத் தவிர, இந்தியா முழுவதும் 10 கோடி செல்லிடப் பேசி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 10,000 4ஜி கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, 4ஜி சேவைக்கான தனி வணிக அடையாளத்தையும் உருவாக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அனுபம் ஸ்ரீவாஸ்தா தெரிவித்தார்.