இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டன.
பங்குச் சந்தைகளுக்கு மிகச் சிறப்பானதாக அமைந்திருந்த இந்த 2017-ஆம் ஆண்டின் கடைசி வாரம் என்பதால், புத்தாண்டை எதிர்நோக்கிய தயக்கத்தால் தொடக்கத்தில் வர்த்தகம் சற்று மந்தமடைந்தாலும், வார இறுதி நாள்களில் மீண்டும் சுறுசுறுப்படைந்து கடந்த வாரத்திலும் பங்குச் சந்தை புதிய உச்சங்களைத் தொட்டது.
மும்பை பங்கு சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புள்ளிகள் 116 புள்ளிகள் (0.34 சதவீதம்) அதிகரித்து சாதனை அளவாக 34,056 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று வாரங்களில் சென்செக்ஸ் 1,107 புள்ளிகள் (3.37 சதவீதம்) அதிகரித்தது. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டியும், கடந்த வாரத்தில் 10,460 புள்ளிகள் முதல் 10,552 புள்ளிகள் வர ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், கடந்த வார இறுதியில் 10,531 புள்ளிகளாக நிறைவுற்றது. இதன் மூலம், நிஃப்டி கடந்த வாரம் 37 புள்ளிகள் (0.36 சதவீதம்) அதிகரித்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பங்கு சந்தைகளுக்கு வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை (டிச. 25) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தில் மனை வர்த்தக நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவங்கள், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, வாகன உற்பத்தி போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சுறுசுறுப்பாக விற்பனையாகின.