தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் டெலிநார் இந்தியாவை கையகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நார்வேயைச் சேர்ந்த டெலிநார் குழுமத்தின் டெலிநார் (இந்தியா) நிறுவனத்தை, பார்தி ஏர்டெல் கையகப்படுத்த உள்ளது. இதற்காக, டெலிநார் சவுத் ஏசியா இன்வெஸ்ட்மென்ட் உடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது.
டெலிநார் நிறுவனத்துக்கு தற்போது, ஆந்திரம், பீகார், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரபிரதேசம் கிழக்கு, உத்தரபிரதேசம் மேற்கு மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஏழு தொலைத் தொடர்பு வட்டங்களில் அலைக்கற்றை உரிமம் உள்ளது. அதன் மூலம், அந்த நிறுவனம் 4.4 கோடி சந்தாதார்களைப் பெற்றுள்ளது.
இந்த கையகப்படுத்தல் ஒப்பந்தத்தின் விளைவாக டெலிநார் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தும் இனி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
ஏர்டெல் நிறுவனம், 26.9 கோடி தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களைக் கொண்டு 33 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. டெலிநார் இணைப்பையடுத்து சந்தைப் பங்களிப்பு மேலும் வலுப் பெரும் என்று பார்தி ஏர்டெல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், எவ்வளவு மதிப்புக்கு டெலிநார் நிறுவனம் கையகப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து பார்தி ஏர்டெல் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
கையகப்படுத்தல் நடவடிக்கைகள் 12 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.