பொதுத் துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, பல்வேறுபட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.60 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளது.
அதன்படி ஓராண்டு கால கடனுக்கான வட்டி விகிதம் 0.60 சதவீதம் குறைக்கப்பட்டு 8.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாத கால கடனுக்கான வட்டி விகிதம் 0.90 சதவீதம் குறைக்கப்பட்டு 0.90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த நடவடிக்கையால், எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வட்டி குறைப்பு ஜனவரி 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது.
அண்மையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எப்.சி. கடனுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது.
அதற்கு முன்னதாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் கடனுக்கான வட்டி விதிதத்தை 0.90 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தன.
அதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கியின் ஓராண்டு கால கடனுக்கான வட்டி விகிதம் 8.90 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.