வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் விறுவிறுப்புடன் காணப்பட்டது. நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
எச்1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்ற நிலைப்பாட்டால் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக அளவில் விற்பனை செய்தனர்.
இதன் காரணமாக, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.
மேலும், அன்னிய நிதி நிறுவனங்களும் தொடர்ச்சியாக இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கி வருகின்றன.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 2.54 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 2.16 சதவீதமும், ரியல் எஸ்டேட் 0.97 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் துறை 0.81 சதவீதமும் சரிவடைந்தன.
இருப்பினும், வங்கி மற்றும் மருந்து துறை நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு காணப்பட்டது.
ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளின் விலை 0.43 சதவீதமும், மிட்கேப் நிறுவனப் பங்குகளின் விலை 0.27 சதவீதமும் குறைந்தன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், இன்ஃபோசிஸ் பங்கின் விலை 2.50 சதவீதமும், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ தலா 2.18 சதவீதமும் சரிந்தன.
மேலும், ஐ.டி.சி., பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 1.56 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
அதேசமயம், ஓ.என்.ஜி.சி., ஏஷியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ், எச்.டி.எப்.சி. வங்கி, எச்.டி.எப்.சி., சிப்லா நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவடைந்து 26,759 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து 8,243 புள்ளிகளாக நிலைத்தது.