டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு உருக்கு உற்பத்தி 32 லட்சம் டன்னாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஒடிஸா மாநிலத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமான உள்ள காலிங்கநகர் ஆலையின் உருக்கு உற்பத்தி சூடுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் அந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, அதன் உற்பத்தி திறன் 25 லட்சம் டன்னை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக, மூன்றாவது காலாண்டில் டாடா ஸ்டீல் உருக்கு உற்பத்தி 32 லட்சம் டன்னை எட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு உருக்கு உற்பத்தியான 25 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம். மேலும், உருக்கு விற்பனை 23 லட்சம் டன்னிலிருந்து அதிகரித்து 30 லட்சம் டன்னாக இருந்தது என்று டாடா ஸ்டீல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.