கடந்த 2016-ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.2.86 லட்சம் கோடியாக இருந்தது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டில் பரஸ்பர நிதி சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இருப்பினும், சில்லறை முதலீட்டாளர்களின் சீரிய பங்களிப்பு பரஸ்பர நிதி துறையின் ஏற்றத்துக்கு சாதகமாக இருந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.2.86 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது. சென்ற 2015-இல் இந்த முதலீடு ரூ.1.77 லட்சம் கோடியாக காணப்பட்டது. டெபாசிட்டுகளுக்கான வட்டி குறைந்ததையடுத்து, முதலீட்டாளர்களின் கவனம் பரஸ்பர நிதி துறையின் பக்கம் திரும்பியது.
இதையடுத்து, முதலீட்டாளர்களிடமிருந்து லிக்யுட் ஃபண்ட் திட்டங்கள் ரூ.1.37 லட்சம் கோடியை ஈர்த்தன. மேலும், வருவாய் சார்ந்த நிதி திட்டங்கள் ரூ.56,000 கோடியும், பங்கு சார்ந்த திட்டங்கள் ரூ.51,000 கோடியும் ஈர்த்தன.
பரஸ்பர நிதி வர்த்தகத்தில் 43 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு ரூ.13.41 லட்சம் கோடியாக காணப்பட்டது. கடந்த 2016-இல் இவற்றின் சொத்து மதிப்பு ரூ.3.52 லட்சம் கோடி (26 சதவீதம்) அதிகரித்து ரூ.16.93 லட்சம் கோடியாக இருந்தது என பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.