உயர் மதிப்பு கரன்ஸி நோட்டுகள் வாபஸ் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டு பிரச்னை வரும் பிப்ரவரி மாதத்தில் முடிவுக்கு வரும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
குஜராத்தில் நடைபெறும் 8-ஆவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:
பாரத ஸ்டேட் வங்கியை பொருத்தவரை வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று சிரமப்படாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு போதுமான அளவில் தொகை அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கேற்ப பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
உயர் மதிப்பு கரன்ஸி வாபஸ் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு பிரச்னை பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். அதன் பிறகு, எப்போதும் போல் கரன்ஸி நோட்டுகள் தேவையான அளவு புழக்கத்துக்கு வரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மீண்டும் ரொக்கத்தை பயன்படுத்த தொடங்கினால் பழைய நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்; எந்த பலனும் கிடைக்காது.
எனவே, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து அதற்கு தீர்வு கண்டு அந்த வகையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளை காண வேண்டும் என்றார் அவர்.
70% வர்த்தகம் பாதிப்பு: பழைய ரூ.500 ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் மும்பை மற்றும் புணே நகரங்களில் 70 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, கட்டுமானத் துறை, சாலையோர வியாபாரிகள் இந்த தடையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.