டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை நியமிக்க நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது. மேலும், நிர்வாகக் குழுவில் கூடுதல் இயக்குநராகவும் அவரை நியமிக்க முடிவாகியது. இந்த நியமனங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸின் நிர்வாக இயக்குநர் - தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் (54) கடந்த வாரம், டாடா குழுமத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். சைரஸ் மிஸ்திரி அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவரைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு சந்திரசேகரனை அந்தப் பதவிக்குப் பரிந்துரைத்தது.
டாடா குழும நிறுவனங்களின் மேம்பாட்டாளர் பங்குகளை நிர்வகிக்கும் தலைமை நிறுவனமாக டாடா சன்ஸ் திகழ்கிறது. அதன் தலைவர் பதவிக்கு என்.சந்திரசேகரனை நியமித்த ஒரு வார காலத்துக்குள் அந்தக் குழுமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு நிறுவனத்துக்கும் அவர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.