செல்லிடப்பேசி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடிய ப்ரீபெய்ட் மொபைல் வாலட் செயலியை பி.எஸ்.என்.எல். நிர்வாகம், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து கோவை தொலைத் தொடர்பு வட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து கோவை தொலைத் தொடர்பு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.சிவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வங்கிக் கணக்கு, இணையதள இணைப்பு இல்லாமல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளக் கூடிய மொபைல் வாலட் சேவையை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வசதியை ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் மட்டுமின்றி, அனைத்து வகையான செல்லிடப்பேசிகளிலும் பயன்படுத்த முடியும்.
இதற்காக முதலில் பி.எஸ்.என்.எல். முகவர்களை அணுகி, தங்களின் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகு பணம் எடுப்பது, செலுத்துவது, மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்வது, செல்லிடப்பேசியில் இருந்து எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்குக்கு மாற்றுவது, பி.எஸ்.என்.எல். கட்டணங்கள் செலுத்துவது, ரீ-சார்ஜ் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
மின் கட்டணம் செலுத்துவது, குடிநீர் கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கும் இந்த சேவையை விரைவில் விரிவுபடுத்த உள்ளோம். இணைய வசதி உள்ளவர்கள் இந்த செயலியை ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் தங்களது செல்லிடப்பேசியில் இருந்து 511 என்ற எண்ணுக்கு டயல் செய்து இந்த வசதியைப் பெறலாம்.
மேலும் 51516 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலமும், 94183 99999 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்வதன் மூலமும் இந்த சேவையைப் பெற முடியும்.
அவரவர் செல்லிடப்பேசி எண்களே, மொபைல் வாலட்டுக்கான எண்ணாகவும் இருக்கும். இதற்கான சேவைக் கட்டணமாக 2 முதல் 3 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.120-ம் பிடித்தம் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.