முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 14 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வென்ட் இந்தியா வருவாய் ரூ.34.95 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீத வளர்ச்சியாகும்.
உள்நாட்டில் விற்பனை 17 சதவீதம் அதிகரித்து 26.92 கோடியாகவும், ஏற்றுமதி 7 சதவீதம் உயர்ந்து 8.03 கோடியாகவும் காணப்பட்டது.
இதையடுத்து, நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்து 2.19 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டைப் போலவே ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.10 வழங்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளதாக வென்ட் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.