தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 24.26 சதவீதம் சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் வர்த்தகம் ரூ.93,525 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.85,208 கோடியாக காணப்பட்டது.
மொத்த வர்த்தகத்தில் வங்கி திரட்டிய டெபாசிட் ரூ.47,336 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.55,066 கோடியாகவும், வழங்கிய கடன் ரூ.37,872 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.38,459 கோடியாகவும் இருந்தது.
வட்டி வருவாய் ரூ.448.20 கோடியிலிருந்து 15.49 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.517.63 கோடியாக காணப்பட்டது.
அதேசமயம், நிகர லாபம் ரூ.152.83 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.115.76 கோடியாக காணப்பட்டது. செயல்பாட்டு லாபம் ரூ.325.57 கோடியிலிருந்து குறைந்து ரூ.271.82 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 1.91 சதவீதத்திலிருந்து அதிகரித்து 2.66 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.96 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.68 சதவீதமாகவும் காணப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நிகர லாபம் ரூ.429.63 கோடியிலிருந்து 9.59 சதவீதம் சரிவடைந்து ரூ.388.42 கோடியாக இருந்தது என்று கரூர் வைஸ்யா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.