மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்வைக் கண்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு வார அளவில் சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
பல நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதகமாக அமைந்தது உள்ளிட்ட காரணங்கள் இந்திய பங்குச் சந்தைகளின் நான்கு நாள்கள் தொடர் ஏற்றதுக்கு உறுதுணையாக இருந்தன.
வங்கித் துறை பங்குகளின் விலை 1.50 சதவீதம் வரை அதிகரித்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்கின் விலை 4.74 சதவீதம் உயர்ந்தது. பார்தி ஏர்டெல் 3.82 சதவீதம் அதிகரித்தது. என்.டி.பி.சி., மாருதி சுஸுகி, பவர்கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலையும் கணிசமாக உயர்ந்தன. அதேசமயம், ஐ.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 2.78 சதவீதம் சரிவைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 174 புள்ளிகள் அதிகரித்து 27,882 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த அக்டோபர் 30-க்கு பிறகு காணப்பட்ட அதிகபட்ச அளவாகும் இது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 8,641 புள்ளிகளாக நிலைத்தது.