முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ.610 கோடி வருவாய் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் ரூ.610 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.542.98 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகமாகும். வழங்கப்பட்ட கடன் 3 சதவீதம் உயர்ந்து ரூ.4,373 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.145.70 கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.162.52 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,539.52 கோடியிலிருந்து 15 சதவீதம் அதிகரித்து ரூ.1,763.67 கோடியாகவும், நிகர லாபம் ரூ.376.42 கோடியிலிருந்து 33 சதவீதம் உயர்ந்து ரூ.499.49 கோடியாகவும் காணப்பட்டது.
நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.3.50 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.